Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 03:22 PM
By: Manigandan Raja

நோய்களில் இருந்து குணமடைந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் :
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெருவில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவில் (சக்தி ஸ்தலம்) அமைந்துள்ளது. பாடைகட்டி மாரியம்மன் என்று
அழைக்கப்படும் இக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 6ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 8ம் தேதி முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 15ஆம் தேதி இரண்டாம் காப்பு கட்டுதல் மற்றும் முதல் நாள் விழாவும் நடைபெற்றது.
தொடர்ந்த தினமும் அம்பாள் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி நடைபெற்றது. முக்கிய திருவிழாவான மார்ச் 22ஆம் தேதி எட்டாம் நாள் திருவிழாவான பாடைகாவடி திருவிழா இன்று நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை ஸ்ரீ அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதி உலா காட்சியும், செடில் சுற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பாடைக் காவடி திருவிழாவை முன்னிட்டு வலங்கைமான் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் நீர் மோர் மற்றும்பக்தர்களுக்கு வழங்கி வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வலங்கைமானில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு திருவிழாவை காணவும், நேர்த்தி கடனை செலுத்தவும் வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இங்கு செலுத்தப்படும் நேர்த்திக்கடன் ஆனது வேறு எங்கெங்கும் காணமுடியாதபடி, வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. அதாவது சகல விதமான நோயினாலும் பாதிக்கப்பட்டவர்கள் ... தங்கள் உடல் பூரண நலம் பெற வேண்டி பாடைகட்டி ஸ்ரீ மகா மாரியம்மனை வேண்டி கொள்கின்றனர்.
பக்தர்களின் உடல் பூரண நலம் பெற்றவுடன் பங்குனி மாதம் நடைபெறும் பாடை காவடி திருவிழாவில் கலந்து கொண்டு, பாடைகாவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். நோயிலிருந்து குணமடைந்தவர்களை ஆற்றில் குளிக்க வைத்து, நெற்றியில் திருநீறு பூசி, பச்சை பாடையில் படுக்க வைத்து இறந்தவர்களுக்கு எப்படி இறுதி சடங்குகள் நடக்குமோ அதை போன்று அவர்களுக்கு, அவர்களது உறவினர்கள் முன்னிலையில்.
பாடையில் படுக்க வைத்து கண்களை கட்டி,கால்களை கட்டி, வாயில் வாய்க்கரிசியை போட்டு, அவர்களது உறவினர்கள் நான்கு பேர் பாடையை சுமந்து கோவிலை மூன்று முறை வலம்
வருகின்றனர்.
பின்னர் கோவில் பூசாரி பாடையில் படுத்திருப்பவருக்கு திருநீர் பூசி அவரை எழச்செய்வார். அதுமட்டுமின்றி... குழந்தைகள் இல்லாதவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டு, பூரண குணமடைந்தவுடன் தொட்டில் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மேலும் அவரவர்களின் வழக்கப்படி காவடியானது ரதக்காவடி, அலகுக்காவடி, பக்க அலகுக்காவடி,பால் அலகுக்காவடி என எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மனுக்கு விஷேச காலங்களில் மாவிளக்கு ஏற்றி, துள்ளுமாவு , நீர் மோர், கஞ்சி வார்த்தல் உள்ளீட்டவைகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved