Also Watch
Read this
Posted on: Feb 10, 2026 08:41 AM
By: Manigandan Raja
ஈரோடு மாவட்டம், காஞ்சிகோயில் பகுதியில் இரவு 10 மணியை கடந்து செயல்பட்ட உணவகத்தை மூட வலியுறுத்தி, தலைமைக் காவலர் ஒருவர், உணவகத்தில் இருந்த பொருள்களை லத்தியால் தள்ளிவிட்டு, அங்கிருந்த வடமாநில ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலானதை அடுத்து, தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
வடமாநில தொழிலாளர்களிடம் வாக்குவாதம்
இரவு 10 மணியை கடந்து செயல்பட்ட உணவகத்தை மூடக் கூறி, அங்கிருந்த பொருள்களை லத்தியால் தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்ட காவலர், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரலாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் காவல் நிலைய பகுதியில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமைக் காவலர் மோகன்குமார், அப்பகுதியில் உள்ள பாஸ்ட் ஃபுட் உணவகம் ஒன்று, இரவு 10 மணியை கடந்து செயல்பட்டதை அறிந்து, அங்கிருந்த ஊழியர்களிடம் கடையை மூடும்படி வலியுறுத்தியுள்ளார்.
லத்தியால் தள்ளி விட்ட காவலர்
கடையில் இருந்த வடமாநில ஊழியர்களிடம் எந்த ஊருடா நீங்க? என அதட்டிய காவலர், கையில் வைத்திருந்த லத்தியால் கடையில் இருந்த பொருள்களை தள்ளிவிட்டு, 10 மணிக்கு மேல் கடை வைக்கக் கூடாது என தெரியாதா? என கேட்டும், நாளை காலையில் கடை இருந்தா? என் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என சவால் விடுத்துள்ளார்.
சிசிடிவியை பார்த்ததும் பம்மிய தலைமைக் காவலர்
ஊழியரின் சட்டையை பிடித்து உலுக்கிய காவலர், போலீஸ் மீதே கையை வைக்கிறாயா? என லத்தியை காட்டி மிரட்டிய போது, அங்கிருந்த சிசிடிவியை ஊழியர் காட்டியதும் பதுங்க தொடங்கினார் போலீஸ் ஏட்டு. நியாயத்தை பேசிய ஊழியரின் சட்டைக் காலரை பிடித்து மிரட்டிய காவலர், காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளால் வசைபாடி தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
தலைமைக் காவலர் மோகன்குமார் பணியிடை நீக்கம்
வடமாநில தொழிலாளியிடம் தலைமை காவலர் மோகன்குமார் எல்லை மீறி நடந்து கொண்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட தலைமை காவலர் மோகன்குமார், ஆயுதப்படை பிரிவுக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் ஈரோடு மாவட்ட எஸ்பி சுஜாதா.
பிழைப்பு தேடி வந்த வடமாநிலத்தவரை மிரட்டுவது சரியா?
இந்த நிலையில், உணவகத்தின் உரிமையாளர் சுரேஷ் என்பவரை நமது நியூஸ் தமிழ் செய்தியாளர் சக்திவேல் தொடர்பு கொண்டு செல்போனில் கேட்டபோது, மூன்று நாளைக்கு முன்னால் இதேபோல பிரச்னை செய்ததாகவும், பிழைப்பு தேடி வந்த வட மாநிலத்தவர்களை அவர்களின் பிறப்பிடத்தை சொல்லி மிரட்டுவது தப்பில்லையா? என்று ஆதங்கப்பட்டார் உணவக உரிமையாளர் சுரேஷ்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved