Also Watch
Read this
By: Manigandan Raja
விருதுநகரை மையமாகக் கொண்டு நேற்று இரவு 9 மணி 7 நிமிடங்களுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 3 ரிக்டர்அளவில் ஏற்பட்டதாக, தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சாலைகளில் கூடியதால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில், நேற்று 29ஆம் தேதி, இரவு லேசான நில அதிர்வு காணப்பட்டதால் வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்தும் வெளியேறி, பொது மக்கள் சாலைகளில் கூடியதால் பரபரப்பு நிலவியது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 3.0 அளவில் நில அதிா்வு ஏற்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்தனா். சிவகாசி, மாரனேரி, ஈஞ்சாா், நடுவப்பட்டி, ராஜபாளையம், சஞ்சீவிமலை, ஸ்ரீவில்லிபுத்தூா், கம்மாபட்டி, சீனியாபுரம், மொட்டமலை, வேப்பங்குளம், அத்திகுளம், கிருஷ்ணன் கோவில், மல்லி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் நில அதிா்வை அதிகளவு உணர்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்தும் வெளியேறினா்.

பொது மக்கள் அச்சப்பட வேண்டாம்
கட்டடங்கள் அல்லது உள்கட்டமைப்புகளுக்கு உடனடி சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை, வீடுகளிலிருந்த பொருள்கள் கீழே விழுந்தன. இந்த நில அதிா்வு ரிக்டரில் 3.0 அளவில் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நில அதிா்வு குறைந்த தீவிரம் கொண்டது என்றும், இது எந்தவொரு பெரிய பாதுகாப்பு குறைபாடுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும், உள்ளூர் அதிகாரிகளும் பேரிடர் மீட்புக் குழுக்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த இயற்கை நிகழ்வு குறித்து, பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அதிகாரிகள், நில அதிர்வின் போது பின்பற்ற வேண்டிய அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

இயல்பு நிலை திரும்பியது
இந்த நில அதிர்வால் சேதங்கள் அல்லது காயங்கள் இல்லை என முதல் கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது பொது மக்களிடையே சிறிது நேரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, பின்னர் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக, அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். புவியியல் வல்லுநா்கள் நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த பின்னரே முழுமையான விவரம் தெரியவரும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.