Also Watch
Read this
ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 8 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி சேலத்தில் 800 கோடி ரூபாய் பணத்தை ஒரு தம்பதி மோசடி செய்தது அதிர வைக்கிறது. உள்ளூர் தொழிலபதிபர்களை மட்டும் குறிவைத்து கச்சிதமாக அரங்கேறிய இந்த மெகா மோசடி குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படும் நிலையில், இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

மோசடி...இப்படியுமா?
சாட்சாத் தெய்வத்தின் மறு உறுவம், கொடுக்கும் பணம் டபுளாக ரிட்டன் வரும் என வாழைப்பழம் போல் பேசி, 800 கோடி ரூபாயை ஒரு தம்பதி அபேஸ் செய்தது தான் சேலம் மாவட்டத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
சேலம் மாநகரை சேர்ந்தவர்கள் ராகிணி - விஜயராகவன் தம்பதி. குரங்கு சாவடி மற்றும் அழகாபுரம் பகுதிகளில் ‘பிராஃபிட் எவர் ட்ரேடர்ஸ்’ (Profit Ever Traders) மற்றும் ‘வராகி குரூப் ஆஃப் கம்பெனி’ (Varahi Group of Company) என்ற பெயரில் இரு நிறுவனங்களை நடத்தி வரும் தம்பதி, வீட்டு லாக்கரில் பூட்டிக் கிடக்கும் பணத்தை தங்களிடம் கொடுத்தால் மாதந்தோறும் வட்டி பணம் தவறாமல் வங்கிக் கணக்கில் விழுந்து விடும் என ஊர் முழுக்க ஆசை வார்த்தை கூறி வலை விரித்துள்ளனர்.

திரைப்பட பாணியில்...
அதிலும், உள்ளூர்களில் சிறிய அளவில் நகைக்கடை, துணிக்கடை நடத்தும் தொழிலதிபர்கள் தான் இவர்களின் மெயின் டார்க்கெட். சாமானிய மக்களிடம் சிறுக சிறுக பணம் வசூலிக்காமல், இவர்களிடம் பெரிய அளவில் பணம் சுருட்டலாம் என கணக்கு போட்ட தம்பதி, ஒருவேளை பித்தலாட்ட செயல் தெரிந்து விட்டாலும் ஏமாறியதை வெளியில் சொல்ல தொழிலதிபர்கள் தயக்கம் காட்டுவார்கள் என்பதால் போலீஸ் வழக்கில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம் என திரைப்பட ரேஞ்சுக்கு பக்காவாக ஸ்கெச் போட்டுள்ளனர்.

தொடங்கியது ஏமாற்றம்...
இது போதாதென தெய்வத்தையும் தனது பித்தலாட்ட செயலுக்கு பயன்படுத்திக் கொண்ட ராகிணி, தாம் கடவுளின் மறு உருவம் என பில்டப்பை ஏற்றி நன்றாக கல்லா கட்டியுள்ளார். நினைத்ததை போலவே பலரும் ஆர்வத்துடன் பணத்தை முதலீடு செய்ய, ஒரு வருடம் எந்த தில்லுமுல்லு வேலையும் செய்யாமல் சொன்னபடியே வட்டியை வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளனர். அதன்பின் சிறிது சிறிதாக வட்டிப் பணம் கொடுப்பதை நிறுத்தியது மோசடி தம்பதி. வங்கி கணக்கில் சில பிரச்சனை, நினைத்ததை போல் வருமானம் இல்லை என சாக்கு போக்கு சொல்லி இன்று, நாளை என ஏமாற்றி வந்துள்ளனர்.

இரட்டிப்பு பணமோசடி
அதோடு நிறுத்தாத பித்தலாட்ட தம்பதி, ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? என்பதை போல், அடுத்த மோசடி வேலையில் இறங்கியது. ஆண்டின் தொடக்கத்தில் 25 லட்சம் ரூபாய் செலுத்தினால் 12 மாதத்தில் அந்த பணத்தை இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம் என ஆசைப் பொடியை அள்ளி வீசியுள்ளது. குறிப்பாக கடந்த முறை மிச்சம் வைத்த தொழிலதிபர்கள், செல்வாக்கு மிக்கவர்களை தேடிச் சென்று ஆசை வலையில் விழ வைத்தனர்.

பணம் கேட்டால் மிரட்டல்
இப்படி ஏறத்தாழ 800 கோடி ரூபாய் வரை பணத்தை சுருட்டிய தம்பதி, அதன் பின் வட்டியையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளது. அதையும் மீறி சிலர் நேரில் சென்று பணம் கேட்டால் போலி செக் கொடுத்து சமாளிப்பது, சிலரை ஆள் வைத்து மிரட்டுவது போன்ற குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இழந்த பணத்தை...
இதனால், ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த முதலீட்டாளர்கள் அனைத்து ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படும் நிலையில், மோசடி செய்த தம்பதி ஜாலியாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். எனவே உடனடியாக அவர்களை கைது செய்து இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.