Also Watch
Read this
By: Manigandan Raja

சட்டவிரோதமாக மண் கடத்தல் :
தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி குளம் மற்றும் குட்டைகளில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இந்தச் சூழலில், அன்னூர் அடுத்த கஞ்சப்பள்ளி ஊராட்சியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொட்டையன் குளத்தில், கடந்த 3 நாட்களாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் மண் அள்ளப்பட்டு வந்துள்ளது.
விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதாகக் கூறிவிட்டு, வணிக நோக்கத்திற்காக கட்டிடங்களுக்கு கிராவல் மண்ணை சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் தவெக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தவெக நிர்வாகிகள், குளத்தில் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றிக் கொண்டிருந்ததை உடனடியாக தடுத்து நிறுத்தினர்.

அப்போது அந்த குளத்தில் விவசாயத்திற்கு பயன்படும் வண்டல் மண்ணே இல்லாதது தெரியவந்தது. வண்டல் மண்ணே இல்லாத நிலையில் குளத்தில் மண் எடுக்க அரசு எப்படி அனுமதி அளித்தது என மண் அள்ளியவர்களிடம் தவெக நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இது குறித்து உடனடியாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், உஷாரான மண் கடத்தல் கும்பல்
அங்கிருந்த ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிப்பர் லாரிகளுடன் தப்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், குளத்தில் நடைபெற்று வந்த சட்டவிரோத மண் கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்தினர். அரசின் சலுகையை தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved