Also Watch
Read this
By: Manigandan Raja

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர்மலையை ஆக்கிரமித்தது. இதையடுத்து, இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து போரிட்டது. மேமாதம் தொடங்கிய போர் ஜுலை மாதம் வரை நடைபெற்றது. இப்போரில், இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. ஜூலை 26-ம் தேதி கார்கில் பகுதியில் இந்தியக் கொடியை நிலைநாட்டியது.
இதையடுத்து, ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில், இந்தியா வெற்றி பெற்று, இந்த ஆண்டுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்போரில் 527 வீரர்கள், தங்களது இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், இந்திய ராணுவத்தின் தக்ஷிண பாரத பகுதியின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும், முப்படைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படையின் மூத்த அதிகாரிகள் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் பள்ளி மாணவர்கள், பைக் ரைடர்ஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை பார்க்க பார்வையாளராக அனுமதிக்கப்பட்டனர்.