Also Watch
Read this
By: Manigandan Raja

ரயில்வே இருப்புப்பாதை தண்டவாளங்களை மேம்பாலங்களின் வழியாகவோ, அன்டர்கிரவுண்ட் வழியாகவோ கடந்து செல்லும் தனியார் பைபர், தொலைதொடர்பு கேபிள்; இணைப்புகளுக்கு ரயில்வே துறையில் விண்ணப்பித்து, லைசன்ஸ் தொகையை செலுத்தி, தடையில்லா சான்று அனுமதி பெற்ற பின்னரே கேபிள் இணைப்புகளை கொண்டு செல்ல வேண்டும் என்பது ரயில்வே விதி.
ஆனால், அவ்வாறு பணம் செலுத்தப்படாமல் மயிலாடுதுறையில் ரயில்வே சந்திப்பில் உள்ள சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலங்களின் வழியாக தண்டவாளத்தை கடந்து 15-க்கு மேற்பட்ட தனியார் கேபிள் இணைப்புகள் முறையற்ற வகையில் செல்கிறது.
அவ்வாறு லைசென்ஸ் இல்லாமல் ரயில்வே மேம்பாலம் வழியாக கேபிள்களை கொண்டு செல்லும் நிறுவனத்தினரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்போது பணியில் இருந்த ரயில்வே அதிகாரியான சீனியர் செக்சன் என்ஜினியருக்காக லஞ்சம் கேட்டு ரயில்வே ட்ராலிமேன் கார்த்தி என்பவர் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில், லைசென்ஸ் இல்லாமல் செல்லும் கேபிள் இணைப்புகளுக்கு தலா ரூ.50,000 தர வேண்டும் என தனது உயரதிகாரி எதிர்பார்ப்பதாக கேபிள் நிறுவனம் நடத்தும் ஒருவரிடம் ரயில்வே ட்ராலிமேன் கார்த்தி கேட்கிறார். இதற்காக, அந்த நபர் 2025 டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ரூ.8,000, ரூ.20,000 என இரண்டு தவணைகளாக ரூ.28,000 யுபிஐ மூலமாக செலுத்தியுள்ள ஆதாரமும் வெளியாகியது.
இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில், கடைநிலை ஊழியரான ட்ராலிமேன் கார்த்தியை சஸ்பென்ட் செய்து மயிலாடுதுறை அசிஸ்டென்ட் டிவிஷனல் என்ஜினியர் நேற்று உத்தரவிட்டுள்ளார். கடைநிலை ஊழியரான கார்த்திக் தனது உயரதிகாரிக்காக லஞ்சம் கேட்ட நிலையில், அவரை மட்டும் பலிகடாவாக்கி, உயர் அதிகாரியை தப்பிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக ரயில்வே ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்ட கார்த்திக்கிடம் திங்கள்கிழமை ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.