Also Watch
Read this
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பாமக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், இறுதி கட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்? யாருடைய பிரச்சாரம் தொகுதி மக்களிடையே எடுபட்டுள்ளது? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

அனல் பறந்த பிரச்சாரம்
கிட்டத்தட்ட ஒரு மாதமாக அனல் பறந்த பிரச்சாரக் களம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், எந்த தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதும் கணிக்கப்பட்டு வருகிறது. அப்படி, பாமகவின் கோட்டையாக அறியப்படும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி நிலவரம் தான் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் பாடி செல்வமும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜி.கே.எம். தமிழ் குமரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் பழனியம்மாளும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கஜேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

ஜி.கே.மணி கோட்டை
பென்னாகரம் தொகுதியை 30 ஆண்டுகளாக கட்டுக்குள் வைத்திருப்பவர் ஜி.கே.மணி என்பதால் தமிழ்க்குமரனுக்கு பெரிதாக அறிமுகம் தேவைப்பட்டதில்லை. அதுமட்டுமில்லாமல் காங்கிரஸின் கை சின்னமும் மக்களுக்கு பரீட்சையமானது என்பதால் அதனை கொண்டு சேர்த்ததிலும் பெரிதாக சிக்கல் இல்லை என கூறப்படுகிறது. நான்கு முனை பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்க்குமரனுக்கு ஆதரவு அலை பலமாக வீசி வருவதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனத்தில் சி.இ.ஓ.வாக இருந்து பல படங்களை தயாரித்து வெற்றிகரமாக அந்த நிறுவனத்தை வழிநடத்தி வரும் தமிழ்க்குமரன், கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரையே பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்து டெபாசிட்டை தக்க வைத்து அசரவைத்தார்.

கள உழைப்பு
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கூட இதுவரை யாரும் பெறாத அளவுக்கு வாக்குகளை பெற்று தலைவராக வெற்றி பெற்றார். திரைத்துறையை சேர்ந்தவர் என்பதால் துணை முதலமைச்சர் உதயநிதியுடன் நெருக்கமாக பழகியதும் அவரது வெற்றிக்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. என்னதான் பண பலம், ஆள் பலம் இருந்தாலும் கள உழைப்பு என்பதை தமிழ்க்குமரன் ஒருபோதும் கைவிட்டதில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

களத்தில் சுறுசுறுப்பு
இதன் எதிரொலியாகவே தேர்தலில் அவரை வெற்றி பெற வைக்க திமுகவினர் எறும்பை போல் சுறுசுறுப்புடன் ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழ்க்குமரனை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற அசைன்மெண்ட், திமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான எ.வ.வேலுவுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது தவிர
ஜி.கே.மணியுடனான நட்பின் காரணமாகவும் தமிழ்க்குமரனுக்கு ஆதரவாக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ஆதரவாளர்களை களமிறக்கி தனது நேரடி கண்காணிப்பில் தேர்தல் வேலைகளை வேகப்படுத்தி இருக்கிறார் எ.வ.வேலு.

வெற்றி வாய்ப்பு
வேறு எந்த வேட்பாளருக்கும் இல்லாத வகையில் தமிழ்க்குமரனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை என முக்கிய தலைவர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை தவற விட்டது. ஆனால், இந்த முறை தமிழ்க்குமரன் மூலமாக பென்னாகரம் தொகுதி திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved