Also Watch
Read this
வாக்குரிமை நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். வருகிற 23ஆம் தேதி நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இபிஎஸ் வெளியிட்ட வீடியோ
இதுதொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது;
ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே ஒரு குடும்பத்தின் அதிகார பசிக்காக அடகு வைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டனர்.

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது. பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. உயர் கல்வித் துறையை சீரழித்து விட்டனர். சந்து பொந்துகளில் எல்லாம் கஞ்சா போதை பொருட்களை விற்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி விட்டனர். இந்த அராஜக, குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட உங்கள் வாக்கு தேவை.

அதிமுக அரசின் திட்டங்கள்
குடிமரமரத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகளை மீட்டெடுத்தது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது, அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக அரசு.

அமோக வெற்றி
இந்த மக்கள் நல திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும். சிறப்பான நமது தேர்தல் அறிக்கையின் மூலம் வளமான ஒரு எதிர்காலத்தை தமிழகத்துக்கு வழங்க இருக்கின்றோம். அதன் மூலம் தமிழகம் இன்னும் முன்னேற்றப் பாதையில் செல்லும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved