Also Watch
Read this
By: Fyrose Banu

திருவிடைமருதூர் தாலுக்கா, பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றானதாகவும் விருச்சிக ராசி பரிகார ஸ்தலமாகவும் விளங்கும் மருத்துவகுடி அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு மகாயாகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, சேலம் பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமதாஸ் இன்னும் மூன்று நாளில் அறிவிப்பார்
தஞ்சை மாவட்ட பாமக செயலாளர் ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் ம.க ஸ்டாலின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேலம் எம்.எல்.ஏ.அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எந்த கூட்டணி வெற்றி பெறுமோ அந்த கூட்டணியில் தான் பாமக இடம்பெறும். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்னும் மூன்று நாளில் அறிவிக்கும் கூட்டணியே வரும் தேர்தலில் வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்தார். மேலும் நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் தான் பாமக, மாம்பழச் சின்னம் இருக்கும் என்றும் இறைவனை தாங்கள் நம்புவதாக கூறிய அவர், தமிழகத்தில் தற்போது கிராம உதவியாளர்கள் முதல் அனைத்து நிலை பணியாளர்களும் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது திமுக அரசின் மீது உள்ள அதிருப்தியின் வெளிப்பாடாகவே உள்ளது என தெரிவித்தார்.
தேர்தலை கணக்கில் கொண்டு தான்...
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகையில் ரூ 5,000 உதவித்தொகை கொடுத்துள்ளது தேர்தலை கணக்கில் கொண்டு தான் என்பது வெளிப்படையாக தெரிகிறது. மக்கள் மீது அக்கறை இருந்தால் கடந்த ஆண்டுகளில் ஏன் அவர் தரவில்லை என கேள்வியெழுப்பினார்.
இபிஎஸ் சிறப்பாக ஆட்சி செய்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது சிறப்பாக ஆட்சி செய்தார். அவர் தற்போது தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் தருவதாக கூறுவது வரவேற்கத்தக்கது தான். ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற இலவசங்கள் ஒரு பக்கம் தேவை. அது உண்மையிலேயே மக்களுக்கான திட்டமாக இருந்தால் அனைவரும் வரவேற்பார்கள்.
ஒரு முட்டாளாக இருக்க வேண்டும்
நீங்கள் திமுகவில் இணைவதாக வந்த செய்தி குறித்து கேட்டபோது, இப்படி சொல்வது ஒரு முட்டாளாக இருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியை பார்த்தவுடன் அதிமுகவில் சேர்வதாக வதந்தி கிளப்புகின்றனர். நான் என்றும் பாமகவில் தான் இருப்பேன். பாமக சார்பான போராட்டத்திற்காக தான் ஆடுதுறை வந்தேன் என பாமக எம்.எல்.ஏ. அருள் திட்டவட்டமாக தெரிவித்தார். 
ராமதாஸ் தலைமையில் தொடர்ந்து பயணிப்போம்
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பிரச்சனை தொடர்பான கேள்விக்கு அது அவர்களுக்குள் உள்ள உரிமை பிரச்சினை. அதில் நாம் கருத்து கூற முடியாது. ஒவ்வொருவருக்கும் கேட்பதற்கு உரிமை உள்ளது. கேட்கிறார்கள். காலம் பதில் சொல்லும். விஜய் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு அது குறித்து ஏற்கனவே வரவேற்றுள்ளோம் என பதில் அளித்தார்.
பாமக முன்பு போல் இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கருதுகிறீர்களா என்று கேட்ட போது, எப்போதும் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமக தொடர்ந்து பயணிக்கும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved