Also Watch
Read this
அழும் குழந்தைகள், கிலுகிலுப்பைக்காரனிடம் இருந்துவிட்டு, அழுகை ஓய்ந்ததும், மறுபடியும் தாயிடம் தான் வரும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். தாயிடம் குழந்தை திரும்புவது போன்று, தமிழ்நாட்டு மக்களும் திமுகவிடம் மீண்டும் வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மீண்டும் எழுந்து வருகிறோம்
தஞ்சாவூரில், திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கான திமுக குடும்பங்கள் இருப்பதால் தான் எவ்வளவு பெரிய புயலை சந்தித்தாலும், திரும்ப திரும்ப மீண்டும் எழுந்து வருகிறோம். திமுக வெறும் அரசியல் இயக்கம் கிடையாது, வெறும் ஒரு கட்சி கிடையாது. திமுக ஒரு சமுதாய இயக்கம். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். அது, மற்ற கட்சிகளை தான் பாதிக்கும். தேர்தல் அரசியலில் தான் நாம் தோற்று உள்ளோம். கொள்கை அரசியலில் திமுக எப்போதும் தோற்காது.

உண்மையை உணர்ந்து இருப்பார்கள்
ஆளும் கட்சியாக இருந்தபோது மட்டுமின்றி, எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்காகவே நாம் உழைப்போம். தமிழகத்திற்கு வரும் ஆபத்துக்களை நிச்சயம் தடுத்து நிறுத்துவோம், மாநில உரிமைகளை நிச்சயம் காப்போம். இந்த பத்து நாட்களிலேயே பெண்கள், இளைஞர்கள் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணர்ந்து இருப்பார்கள். போகப் போக இன்னும் பல உண்மை தெரிய வரும்.

குழந்தைக்கான கிலுகிலுப்பை
தாயின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய ஒரு குழந்தை, கிலுகிலுப்பை-ஐ (Kilukiluppai) ஆட்டி, விளையாட்டு காட்டுபவர்களை பார்த்து மயங்கும். அந்த குழந்தை கிலுகிலுப்பையை காட்டுபவரிடம், நிரந்தரமாக இருக்காது. சிறிது நேரத்திற்கு பிறகு, குழந்தைக்கு உண்மையான பாசம் எதுவென தெரிந்து தாயின் முகத்தை தேடும், தாயிடம் மீண்டும் வரும். அதுபோல இந்த கவர்ச்சி மாயாஜாலத்தை காட்டி, மக்களை ஈர்த்து உள்ளனர். இந்த கவர்ச்சி மக்களின் கஷ்டங்களை போக்காது. அடிப்படை பணிகளை நிறைவேற்றாது. எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாது. தமிழகத்திற்கு தாயாக இருக்கக்கூடிய திமுக மற்றும் தலைவரை நோக்கி நிச்சயம் அந்தக் குழந்தை விரைவில் வரும். சூரியன் ஒருபோதும் மறையாது மீண்டும் உதிக்கும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved