Also Watch
Read this
By: Manigandan Raja

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியில் இரவு நேரத்தில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேல் நீடித்த மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆரணி பேரூராட்சியில் அண்மைக் காலமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் சரிவர பதிலளிப்பதில்லை என புகார் தெரிவித்தனர்.
சனிக்கிழமையும் இரவு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை நீடித்ததால் பொறுமை இழந்த மக்கள் ஆரணி பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் புகார்களுக்கு செவி மடுத்து விளக்கம் அளிக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வருவது இல்லை என குற்றம் சாட்டினர்.

கொளுத்தும் வெயில் காலத்தில் இரவு நேரத்தில் இதுபோன்று அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டால் எப்படி தூங்கி மறுநாள் எழுந்து வேலைக்கு செல்வது என கேள்வி எழுப்பினர். மேலும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் காவல்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்வாரிய அதிகாரிகள் யாரும் ஏன் வரவில்லை என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மின் ஊழியர்கள் மின் பழுதை சரிசெய்து விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என சமாதானம் பேசி கொண்டிருந்த போதே மீண்டும் மின்சாரம் வந்ததால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பெரியபாளையம் - புதுவாயல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved