Also Watch
Read this
By: Manigandan Raja

கல்குவாரி முன்பு பொதுமக்கள் முற்றுகை :
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாவாரப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியை எதிர்த்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டாம்பட்டி ஒன்றிய அதிமுக பிரமுகர் வெற்றிச் செழியனின் மகன் புதியவன் பெயரில், அரசு புறம்போக்கு நிலமான புல எண் 399/2A-ல் சுமார் 4.00.5 ஹெக்டர் பரப்பளவில் 2024 முதல் 2029 வரை 5 ஆண்டுகளுக்கு குவாரி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், குவாரியில் அரசு நிர்ணயித்த அளவை மீறி அதிக அளவில் வெடிமருந்துகள் பயன்படுத்தி கல் வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன், நீர்நிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சினையை எதிர்த்து, வழக்கறிஞர் பாண்டியராஜன் தலைமையில் பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் குவாரி முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி காவல்துறை ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குவாரியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த காவல்துறையினர், முறையான புகார் மனு அளிக்கப்பட்டால், அதை கனிம வளத்துறை அதிகாரிகளிடம் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், இதுகுறித்து விசாரித்தபோது, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் பாண்டியராஜன் சகோதரர் சப் கான்ரெக்ட் ஈடுபட்டு 8 இலட்சம் ரூபாய் வரை பாக்கி உள்ளதாகவும்.
இதுகுறித்து பிரச்சனை ஏற்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சகோதரருக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved