Also Watch
Read this
By: Manigandan Raja

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள முனியப்பன் புதூர் கிராமம் அருந்ததியர் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மயான பகுதியை திடீரென கடந்த 2017ஆம் ஆண்டு தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து சடலங்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது .
இது சம்பந்தமாக ராசிபுரம் வட்டாட்சியர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த சாந்தா (65)என்பவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு சென்ற போது "இது தங்களுக்கு சொந்தமான பட்டா நிலம்" எனக்கூறி தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஜெயந்தி சடலத்தை புதைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் இறந்த பெண்ணின் உடலை சாலையில் கட்டிலில் படுக்க வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பும்,
போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அங்கு வந்த வட்டாட்சியர் சசிகுமார் உட்பட அதிகாரிகள் இருதரப்பினிலே பேச்சுவார்த்தை நடத்தி இறந்த பெண்ணின் உடலை புதைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது .
பல மணி நேரம் நீடித்த சாலை மறியலை கைவிட்ட சாந்தாவின் உறவினர்கள் இனி எந்த சூழ்நிலையிலும் மயானத்தை ஆக்கிரமிக்க கூடாது என தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகாரிகளிடம் வைத்தனர் .