Also Watch
Read this
Posted on: Feb 07, 2026 06:30 AM
By: Manigandan Raja
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நிர்வாகிகள் திரண்டு வருவதால், நெருக்கடி ஏற்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அனுமதியே இல்லாமல் தவெகவினர் சாலைகளில் தடுப்புகளை அமைத்து இடையூறு செய்வதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புது பஞ்சாயத்து
எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பனையூர் தவெக அலுவலகத்தில் தொண்டர்கள் மொய்ப்பதால், குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் புது பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.
ஒன்றரை மணி நேரத்திலேயே...
தமிழக வெற்றிக் கழகம் தனது கன்னித்தேர்தலில் களமிறங்க தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யும் பணியை, பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெருந்திரள் நிர்வாகிகள் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டனர். ஒன்றரை மணிநேரத்திலேயே 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தவெக அலுவலகம் முதல் சாலை வரை தவெக நிர்வாகிகள் நிரம்பிய நிலையில் பேரிகார்ட் அமைத்து தவெகவினர் தடுத்ததாக சொல்லப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
தவெக அலுவலகம் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்திருக்க கூடிய நிலையில், நிர்வாகிகள் வருவதும் போவதுமாகவே இருப்பதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வெளியே சென்று வரமுடியாமல் தவிப்பதாக குடியிருப்புவாசிகள் செய்தியாளர்களிடம் வருத்தத்தை தெரிவித்தனர்.
குடியிருப்புவாசிகள் வேதனை
தவெக அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வரும் நிர்வாகிகள் தங்களது வாகனங்களை 13 தெருக்களில் நிறுத்தி வைத்துவிட்டு செல்வதால் நெருக்கடி ஏற்படுவதாக குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. அவ்வப்போது தடுப்புகளால் அடைத்துவிடுவதால் தங்களால் தெருக்களில் இயல்பாக செல்ல முடியாவில்லையென குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.
வாழவே முடியாத சூழல்
இந்த பகுதியில் வசிக்கும் சிலர் மட்டும் தவெகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, போலீசார் தடுப்புகள் அமைக்கவில்லை, தவெகவினரே பேரிகார்டு போட்டு தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். எப்போதுமே பரபரப்பாக இருப்பதால் இப்பகுதியில் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும், குடியிருப்புவாசிகள் மனக் குமுறலை வெளிப்படுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved