Also Watch
Read this
Posted on: Feb 06, 2026 08:38 AM
By: Manigandan Raja
மதுரை மாவட்டம், ஆண்டார்கொட்டாரம் அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறந்து வைக்கப்பட்ட கலையரங்கத்தை நாற்பதே நாட்களில் மூடு விழா நடத்திவிட்டு ரேசன் கடையாக ALTER செய்து அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், அவசரம் அவசரமாக புதிய திட்டப்பணிகளை திறந்து வைப்பதாக அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கலையரங்கம், ரேஷன்கடை
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட கலையரங்கத்தை புத்தம் புது கட்டடத்தை போல் பேட்ச் வொர்க் செய்து ரேஷன் கடையாக மாற்றியதோடு, அதற்கு சீரும் சிறப்புமாக விழாயெடுத்தது தான், எள்ளி நகையாட வைத்திருக்கிறது.
ஒரே கட்டடத்துக்கு இருமுறை திறப்பு விழா
மதுரை மாவட்ட கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பத்திர பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி, ஆண்டார்கொடாரம் களஞ்சியம் நகரில் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி கலையரங்கம் ஒன்றை திறந்து வைத்தார். பொது மக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அமைச்சர் மூர்த்தியின் சட்டமன்ற நிதியிலிருந்து கட்டப்பட்ட நாடக மேடை 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்நிலையில் தான் கலையரங்கத்தை சுற்றிலும் தகர ஷீட்டுகளால் அடைத்து பேட்ச் வொர்க் செய்து, ரேசன் கடையை போல் மாற்றப்பட்டது. அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ரேசன் கடையை திறக்க, ஒரே கட்டடத்துக்கு இருமுறை திறப்பு விழா நடத்திய கேலி கூத்து அரங்கேறியுள்ளது.
ரேசன் கடை திறப்பு விழா
இந்த பகுதியில் ரேசன் கடை கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, பணிகளும் தொடங்கி விட்ட நிலையில், தேர்தலுக்குள் கட்டுமான பணி முடிவடையாது என்ற சூழலில் கலையரங்கத்தை ரேசன் கடையாக மற்றியதாக சொல்லப்படுகிறது. கலையரங்கத்தை மூடிவிட்டு கடந்த 3ஆம் தேதி ரேசன் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவுக்காக பேனர் வைக்கப்பட்டு, வழிநெடுகிலும் திமுக கொடிகள் பறக்கவிடப்பட்டு அமைச்சர் மூர்த்திக்கு வரவேற்பு பலமாக இருந்தது. இவ்விழாவுக்காக 100 நாள் வேலையிலிருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்டனர்.
நிரந்தர கட்டடம், எதிர்பார்ப்பு
காலை 11 மணிக்கு வரவிருந்த அமைச்சர் மூர்த்தி, வெகு நேரமாக வராததால் காத்திருந்த மக்கள் கலைந்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து மாலை 4 மணிக்கு வந்த அவரை வரவேற்க ஆளில்லாததால் அதிகாரிகளோடு மட்டும் ரிப்பனை வெட்டி கட்டடத்தை திறந்து வைத்து புறப்பட்டு சென்றார்.
இவ்விழா நடந்த அதே நாளில் தொகுதிகளில் சில ரேசன் கட்டடங்களை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி, பத்தோடு பதினொன்றாக களஞ்சியம் நகரிலும் அவசர அவரமாக ரேசன் கடையை திறந்து வைத்ததாக தெரிகிறது. கலையரங்கம் தற்காலிக ரேசன் கடையாக மட்டுமே மாற்றப்பட்டிருக்கும் நிலையில், ரேசன் கடைக்கென நிரந்தர கட்டடத்தை கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் பாலமுருகன்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved