Also Watch
Read this
By: Web Team

கருத்து முரண்பாடு கொண்டவர்கள், ஊழல் குற்றச்சாட்டு கூறியவர்களையே கட்சியை விட்டு சென்றுவிடாதபடி பார்த்துக் கொண்டவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்று செங்கோட்டையன் சுட்டிக்காட்டி உள்ளார். பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து இபிஎஸ் விரைந்து முடிவெடுக்காவிட்டால் அவரது சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறி உள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில், மனம் திறந்த செங்கோட்டையன் அளித்த பேட்டிக்கு பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கூறிய பதில்:
கேள்வி: உங்களது கோரிக்கையை இபிஎஸ் நிராகரித்து விட்டால், என்ன செய்வீர்கள்?
செங்கோட்டையன் பதில்: என்னை பொறுத்தவரைக்கும் 2 விஷயங்களை கூறினேன். விரைந்து இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அனைவரது ஆசை. அப்படி இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்த மனநிலையில் இருப்பவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்வோம். இதுதான் எங்களுடைய நோக்கம். இந்த கோரிக்கையை விரைந்து செயல்படுத்தவில்லை என்றால் (இபிஎஸ்) சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.
கேள்வி: பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். எதற்காக அவர் மறுக்கிறார். அவரது தலைமைக்கு பாதிப்பு வரும் என்று நினைக்கிறாரா?
பதில்: அவரது மனநிலை பற்றி எனக்கு தெரியாது. என்னுடைய மனநிலை, தொண்டர்களின் மனநிலை. பொதுமக்கள் இந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் மனநிலையை தான், இங்கு நான் வெளிப்படுத்தினேன்.

கேள்வி: ஓபிஎஸ் பிரிந்து சென்ற போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினீர்கள். அதனை மீறி ஓபிஎஸ் வெளியேறினார். கட்சியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இப்போது ஓபிஎஸ்-ஐ சேர்த்து கொள்ள சொன்னால் எப்படி சேர்க்க முடியும் என்று தான் இபிஎஸ் மனநிலை இருக்கிறதே?
பதில்: அன்று தலைமை மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த எஸ்.டி.சோமசுந்தரத்தையே மன்னித்தார் எம்.ஜி.ஆர். ஆளுனரிடம் ஊழல் குற்றச்சாட்டு கூறியவர்களையே எம்ஜிஆர், "இணைந்து பணியாற்றுங்கள்" என்று கூறினார். இவர்கள் அப்படி எல்லாம் சொல்லவில்லையே.
கேள்வி: நீங்கள் அடுத்த பொதுச்செயலாளராக முயற்சி செய்வீர்களா?
பதில்: இந்த இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். இந்த இயக்கம் உயிரோட்டம் உள்ள இயக்கமாக, ஜெயலலிதா 100 ஆண்டுகள் வாழும் என்று குறிப்பிட்டது போல், அதற்காக எனது பணிகளை இன்று தொடங்கி இருக்கிறேன்.
கேள்வி: சசிகலா உள்பட ஒத்தக் கருத்துடையவர்களை சந்தித்து இருக்கிறீர்களா?
பதில்: அது சஸ்பென்ஸ்
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.