Also Watch
Read this
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கோவில் மடத்துக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஒருவருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பகீர் கிளப்பியிருக்கும் சூழலில், ஏற்கெனவே முறைகேடு புகாரில் சிக்கி சிறையில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தான் இதையும் பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், கோவில் மட நிர்வாகமோ இந்த நிலம் தங்கள் கோவிலுக்கே சொந்தமானது அல்ல என டிவிஸ்ட் கொடுத்து உள்ளது.

இன்னொரு புகாரா?
தமிழ்நாட்டையே உலுக்கிய பழனி தண்டாயுதபாணி கோவில் நில முறைகேடு சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பே இன்னும் அடங்காத சூழலில், மற்றுமொரு கோவிலுக்கு சொந்தமான இடமும் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக எழுந்திருக்கும் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மறுநாள் நடந்தது
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் உள்ளது கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவில் மடம். இந்த மடத்துக்கென சொத்துக்கள் உள்ள நிலையில், மேற்கு ஆயக்குடியில் உள்ள புல எண் 87/3 என்ற 2 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை வெறும் 9 லட்சம் ரூபாய்க்கு தனி நபருக்கு முறைகேடாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

160 ஆண்டுகளுக்கு...
இந்நிலையில், இதில் திடீர் திருப்பமாக சம்மந்தப்பட்ட 87/3 என்ற புல எண் கொண்ட நிலம், மடத்துக்கு சொந்தமானது அல்ல என ஆதாரங்களுடன் விவரிக்கின்றனர் மட நிர்வாகிகள். அதாவது தங்கள் மடத்துக்கு கிழக்கு ஆயக்குடியில் மட்டுமே நிலம் இருப்பதாகவும் மேற்கு ஆயக்குடியில் நிலம் இல்லை என்றும் கூறியுள்ளனர். மணி என்பவரிடம் சர்ச்சைக்குரிய இந்த நிலத்தை வாங்கியிருக்கும் கந்தசாமியின் மகனும் இது கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவில் மடத்துக்கு சொந்தமான இடம் அல்ல என்றும், தாங்கள் 160 ஆண்டுகளுக்கு வில்லங்கம் எடுத்து பார்த்ததில் அது தனி நபருக்கு சொந்தமான நிலம் என்றே பதிவாகியுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

கடிதம் வெளியானது, குழப்பம்
இதனிடையே, உண்மையில் மடத்துக்கு சொந்தமான கிழக்கு ஆயக்குடியில் உள்ள புல எண்கள் 200/4, 273/5, 173/1, 173/2, 174/1 மற்றும் மேற்கு ஆயக்குடியில் உள்ள 87/3 ஆகியவற்றை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனக் கூறி அறநிலையத்துறை இணை ஆணையர் நாகவேல்,

கடந்த மார்ச் ஐந்தாம் தேதி பத்திரப்பதிவுத்துறைக்கு எழுதிய கடிதமும் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிமன்றத்தை அணுகி...
உண்மையில் நிலம் யாருக்கு தான் சொந்தம்? என விசாரிப்பதற்காக அன்று கடிதம் எழுதிய இணை ஆணையர் நாகவேலை தொடர்புகொண்டு கேட்ட போது, நிலத்தை ஆய்வு செய்த பழனி சரக ஆய்வர் கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையிலேயே கடிதம் எழுதியதாகவும், உண்மையில் இது அவர்களுக்கு சொந்தமான நிலம் இல்லை என்றால் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் என்றார்.

யார் சொல்வது உண்மை?
இந்த சூழலில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகை எடுத்து பயன்படுத்தி வந்த நபர், அந்த நிலத்தை முறைகேடாக தமது பெயருக்கு மாற்றி தரச்சொல்லி தொந்தரவு செய்து வந்ததாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அறநிலையத்துறைக்கு தவறான தகவலைச் சொல்லி மடம் குறித்து அவதூறு பரப்பியதாகவும் கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதில் யார் சொல்வது உண்மை? என்பதை பத்திரப்பதிவுத்துறையும் அறநிலையத்துறையும் தான் விளக்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved