Also Watch
Read this
By: Admin News Tamil
பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக, சிபிஐ விசாரணை வேண்டும் என, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார் போர்க்கொடி தூக்கி உள்ளார். மேல்மட்ட அளவிலான அதிகாரிகளின் கடைக்கண் பார்வை இல்லாமல் இந்த மோசடிக்கு வாய்ப்பே இல்லை என அடித்துச் சொல்லும் அவர், அறநிலையத்துறை மற்றும் பதிவுத்துறை என இரு துறைகளின் செயலாளரான குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். மீது சந்தேக கணைகளை வீசியுள்ளதன் பின்னணி என்ன?

ரூ.100 கோடி நிலம், விசாரணை
பழனி முருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள தண்டாயுதபாணி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்கு தனி நபர்களுக்கு விற்பனை செய்வதாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பத்திரப்பதிவு முறைகேடு தொடர்பாக பதிவுத்துறை கூடுதல் தலைவர் தலைமையிலான மூவர் குழு ஒருபுறமும், மோசடி தொடர்பான கிரிமினல் வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறுபுறமும் விசாரணையை இறுக்கி வருகின்றனர்.

சிபிஐ விசாரணை கேட்டு...
இந்த நிலையில், பத்திரப்பதிவு மோசடி விவகாரத்தில், பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிய சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்ற படியேறப் போவதாக தெரிவித்துள்ளார் இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார். பத்திரப்பதிவு மோசடியின் பின்னணியில், இந்து சமய அறநிலையத்துறை, பதிவுத்துறை என 2 துறைகளுக்கும் செயலாளராக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி குமரகுருபரனின் வழிகாட்டுதல் அல்லது தலையீடு இருக்குமோ? என சந்தேகத்தை எழுப்பியுள்ள அவர், மடத்தின் தக்காராகவும், அப்போதைய இணை ஆணையராகவும் இருந்த மாரிமுத்து, நேரடியாக புகார் அளிக்காமல், அதிகார வரம்பற்ற நிலங்கள் பிரிவின் கண்காணிப்பாளரை கொண்டு புகார் அளிக்க வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கையெழுத்திட்டது வட்ட செயலாளரே...
மோசடி தொடர்பாக CB-CID விசாரித்து வரும் நிலையில், பதிவுத்துறையே தனியாக ஒரு குழு அமைத்து விசாரிப்பது முறைகேடுகளை மூடிமறைக்கும் முயற்சியாகும் என விமர்சித்துள்ள ராம.ரவிக்குமார், நீதிமன்றம் தாமாக முன்வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார். அப்போதைய இணை ஆணையரான மாரிமுத்து மீது சரமாரியாக குற்றம் சாட்டிய ராம.ரவிக்குமார், பத்திரத்தில் சாட்சி கையெழுத்திட்டதே கருப்பு சிவப்பு கட்சியை சேர்ந்த வட்டச் செயலாளரே என்று பகீர் கிளப்பினார்.

அரங்கேற்றிய நாடகம்
அதிகாரிகளை காப்பாற்ற அமைச்சர் முயற்சிக்கிறார்; ஆனால் அதிகாரிகளோ அமைச்சரை அவமானப்படுத்த, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த, திமுக மனநிலையில் இருந்து சிந்திக்கிறார்களோ? என்ற சந்தேகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார் இராம.ரவிக்குமார். பழனி கோயிலில் 100 கோடிக்கு வருமானம் வந்ததாகவும், 60 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை ஆனதாகவும், கோயில் சார்பில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகள் தொடர்பாகவும் வரிசையாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன, பத்திரப்பதிவு மோசடியை மறைப்பதற்காக, அப்போதைய இணை ஆணையரான மாரிமுத்து அரங்கேற்றிய நாடகம் இது என்று சரமாரியாக சந்தேகத்தை எழுப்பினார் அவர்.

போராட்டம் ஓயாது...
ஆக்கிரமிப்பாளர்கள் எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், அவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் ராம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.