Also Watch
Read this
பழனி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்ற அமர்வு, நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடித்து அது தொடர்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவும் சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டன் நேரில் ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.

நூறு கோடி மதிப்புள்ள நிலம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக கிரயம் செய்யப்பட்டது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஜூலை 6ஆம் தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரது பெயர்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கும் மாற்றப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், கோவில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஜஸ்டின் மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த போலி பத்திரப்பதிவை மனுதாரர் மட்டும் செய்யவில்லை, பாலச்சந்தர் என்ற பதிவாளர் 3ஆம் தேதியே பதிவு செய்துவிட்டார், ஆனால் அரசு திட்டமிட்டு ஜஸ்டின் மணிகண்டனை மட்டும் குற்றவாளியாக்கி பத்திரப்பதிவு செய்தவரை தப்பிக்க வைத்துள்ளது என வாதிட்டார்.

அரசுத் தரப்பு வாதம்
இதனை தொடர்ந்து, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நிலம் கோவிலுக்கு சொந்தமானது என வில்லங்க சான்றிதழில் ஏற்கெனவே தெளிவாக கூறப்பட்டிருக்கும் போது அவசர அவசரமாக ஏன் பதிவு செய்ய வேண்டும்? 3ஆம் தேதி பதிவுக்கான வேலைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன, ஜஸ்டின் மணிகண்டன் தான் முறைப்படி பதிவு பணிகளை முடித்துள்ளார் என எதிர்வாதத்தை வைத்ததோடு ஜஸ்டின் மணிகண்டன் மீது இதே போன்று 2 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜஸ்டின் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முறைகேடு விவகாரத்தில் மனுதாரருக்கு மட்டும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை, மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது, ஏற்கனவே பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? 2 சார்-பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? என கேள்வி எழுப்பினர்.

இடைக்கால அறிக்கை...
அதோடு, நிலம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார் யார்? என்பதை சிபிசிஐடி போலீசார் தெளிவாக விசாரணை நடத்தி அதற்கான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதுவரை இடைநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இடைக்கால முன் ஜாமின் வழங்கப்படுகிறது எனவும் கூறி உத்தரவிட்டார். மேலும், ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved