Also Watch
Read this
சேலம் ஆர்.ஆர்.பிரியாணி சாம்ராஜ்ஜியத்தின் தலைவன் தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான கேட்டரிங் கல்லூரியில் அட்மிஷன் போட்ட பல இளைஞர்கள் கம்பிகட்டும் வேலைக்கும், பெட்ரோல் பங்கிற்கும் வேலைக்கு செல்வதாக வருத்தம் தெரிவித்து உள்ளனர். ஆசைகாட்டி மோசம் செய்த ஆர்ஆர் கல்லூரியிடம் இருந்து தங்களது பத்தாம் வகுப்பு சான்றிதழையாவது வாங்கி தருமாறு ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ள மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு என்னதான் பதில் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கரை புரண்டாடும்...
கையில் கால் காசு கூட இல்லாத ஒருவர், பெரிய பிசினஸ்மேன் ஆக வேண்டும் என்ற கனவோடு, சேலம் ஆர்ஆர் பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவர் தமிழ்ச்செல்வனின் மோடிவேஷ்னல் வீடியோக்களை பார்த்தால் போதும், தன்னம்பிக்கை கரைபுரண்டு ஓடும். அப்படி பலரையும் தனது ஃபிளாஷ்பேக் மூலம் வியக்க வைத்த ஆர்ஆர் பிரியாணியின் மன்னன் தமிழ்ச்செல்வனால் இளைஞர்கள் பலர் திக்குதெரியாமல் முழித்துக் கொண்டிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்து வந்த பாதை...
குடும்ப வறுமை, கூடவே தாய் இல்லாத வெறுமை என பசுமையே இல்லாத பின்னணியை கொண்டவர் தான் தமிழ்ச்செல்வன். 4ஆம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு தெருமுனையில் உள்ள ஒரு கடையில் டீ கிளாஸ் கழுவிய இவர் தனது 13ஆவது வயதிலேயே மூட்டை தூக்கியாவது பிழைக்கலாம் என சென்னைக்கு ஓடிவந்துவிட்டார்.

அதிர்ஷ்டம் இருந்தால் அரங்குக்குள்ளேயே இருந்தாலும் அதிபதி ஆகலாம் என சொல்வதுபோல் தள்ளுவண்டியில் கையேந்தி பவன் ஒன்றை ஆரம்பித்து, அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட கிளைகளை பரப்பி, பிரியாணி வெறியர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் தனது ஆர்ஆர் பிரியாணி பொட்டலத்தை இடம்பிடிக்க வைத்தார்.

இவர் கடந்து வந்த பாதையை கேட்டு பலரும், வாட் எ மேன் என பிரம்மித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், நான் பிறந்த மண்ணுக்கும், மொழிக்கும் கை மாறாக ஒரு கேட்டரிங் கல்லூரியை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாணவர்கள் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தை வாரி அள்ளலாம் எனவும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இரண்டே ஆண்டுகளில்...
எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி விடமாட்டோமா என்ற ஏக்கத்தில் இருந்த மாணவர்கள் பலரும் கிருஷ்ணகிரி மாவட்டம் சமத்துவபுரம் பகுதியில் ரிம்ஸ் RIMS கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்ட சேலம் ஆர்.ஆர். ஓட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்ரிங் கல்லூரியில் அட்மிஷன் போட்டனர். ஆனால், இரண்டே ஆண்டுகளில் கல்லூரியையே இழுத்துமூடி தங்கள் கனவில் மண் அள்ளிப்போடுவார்கள் என்பதை மாணவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

கல்லூரி எங்கே?
உணவு, தங்குமிடம் இலவசம் எனக்கூறிய நிர்வாகம் அடுத்து அந்த செலவையும் தங்கள் தலையில் கட்டியதாக கூறிய மாணவர்கள், 4 ஆயிரம் ரூபாய் கூட ஊதியம் இல்லாத பார்ட் டைம் வேலைக்கு அனுப்பி அதிலும் பாதியை பறித்துக் கொண்டதாகவும், ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ், கோர்ஸ் கம்ப்ளீட் சர்டிபிகேட் என எதுவுமே தராமல் இழுத்தடிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

வெளிநாட்டில் வேலை, 5 ஸ்டார், 7 ஸ்டார் என ஆசையை தூண்டிய ஆர்ஆர் கல்லூரி, தற்போது ஏன்தான் படித்தோமோ என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டதாகவும், தற்போது கல்லூரியே இடிக்கப்பட்டு அவல நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

மாணவர்கள் மனக்குமுறல்
எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்ஆர் கல்லூரியில் படித்த மாணவர்கள் பெட்ரோல் பங்கிலும், சென்ட்ரிங் பணிகளிலும் ஈடுபட்டிருப்பதாக கவலை தெரிவித்து, யாரிடம் முறையிடுவது?

எப்படி சான்றிதழ் பெறுவது? எப்படி வேலைக்கு செல்வது? என கேள்வி எழுப்பி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மாணவர்களின் இந்த மனக்குமுறலுக்கு பிரியாணி சாம்ராஜ்ஜிய மன்னன்தான் மருந்துபோட வேண்டும்.