Also Watch
Read this
சென்னையில் மாணவர்களுக்கான சமூக நீதி விடுதிகளை முதலமைச்சர் விஜய் திடீரென ஆய்வு செய்த நிலையில், அவரிடம் மாணவர்கள் அடுக்கடுக்கான புகார்களை அடுக்கினர்.

அரசு நடத்தும் விடுதிகளின் அவல நிலையை நேரில் கண்டறிந்த முதலமைச்சர், மாணவர்களின் அனைத்து குறைகளையும் உடனடியாக சரிசெய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சமூகநீதி விடுதிகளுக்கு...
வழக்கமாக, வெள்ளிக்கிழமைகளில் சற்றே சீக்கிரமாக அலுவல்களை முடித்து புறப்படும் வழக்கத்தை கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், இந்த வாரம் திடீரென சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதிகளுக்கு விசிட் அடித்தார்.

பட்டு, வேட்டி சட்டையில் விஜய் வந்த நேரத்தில் மழை மெல்ல தூறல் போட ஆரம்பித்து இருந்தது. முதலில் எம்.சி.ராஜா சமூக நீதி விடுதியிலும் பின்னர் தாதண்டர் நகரில் உள்ள சமூக நல விடுதியிலும் ஆய்வு மேற்கொண்டு விடுதிகளின் தரத்தை பார்வையிட்டார்.

விடுதிக்குள் எண்ட்ரி கொடுத்ததுமே, ’அண்ணா அண்ணா’ என மாணவர்கள் அன்பை வாரி இரைத்தனர்.

சற்று தாமதமாக வந்தால்...
திமுக ஆட்சியின் போது புனரமைக்கப்பட்ட எம்.சி.ராஜா விடுதியில் கட்டிடம் புதிதாக இருந்தாலும் போதுமான வசதிகள் இல்லை என்பது மாணவர்களின் குறையாக இருந்தது.

கொசுக்கடி தாங்க முடியவில்லை என்பது மாணவர்களின் புகார் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்து இருந்தது. சாப்பாடு சரி இல்லை என்பது மாணவர்களின் மற்றொரு புகார். விடுதிகளில் முறையாக கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

பணி முடித்து இரவு கொஞ்சம் தாமதமாக வந்தாலும் காவலாளிகள் கேட்கும் கேள்விகளில் கேலியும், கிண்டலும் மட்டுமில்லை, தரமும் இல்லை என்பது மாணவர்கள் சிலரின் கவலையாக இருந்தது.

உடனடியாக உத்தரவு
மாணவர்கள் சொன்ன எல்லா குறைகளையும் பொறுமையாக கேட்ட முதலமைச்சர், அதிகாரிகளை அழைத்து குறைகளை உடனே சரி செய்யுங்க, அடுத்த முறை நான் வரும்போது எந்த குறையும் இருக்க கூடாது என்றார்.

ஆய்வு முடித்து புறப்பட்ட போதும் மழை தூறல் போட்டபடியே இருந்த தால் தனக்கான குடையை தானே பிடித்தபடியே நடந்து சென்றார்.

சாலையில் முதலமைச்சரை காண திரண்டிருந்த கூட்டத்தை கண்டதும், கையை அசைத்து வாழ்த்தை ஏற்ற போதும் கூட, அவரது முகத்தில் மாணவர்கள் சொன்ன புகார்களால் ஏற்பட்ட யோசனைகள் ஓடுவதை காண முடிந்தது.
