Also Watch
Read this
சென்னை, திருவல்லிக்கேணியில் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட விவகாரத்தில், சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி பரபரப்பை கூட்டியிருக்கிறது. கள்ள நோட்டு கும்பலுக்கு பின்னணியில் உள்ள மலேசிய பெண் யார்? வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது யார்?

கள்ள நோட்டு விவகாரத்தில்...
சென்னை லாட்ஜில் சிக்கிய 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு விவகாரம், இப்போது சாதாரண ஒரு லோக்கல் வழக்காக இல்லாமல், சர்வதேச எல்லையை தாண்டி மலேசியா வரை நீண்டு, தமிழகத்தையே அதிர வைத்து கொண்டிருக்கிறது.

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் பல லட்சம் கள்ள நோட்டுகள் கைமாறப் போவதாக, கிடைத்த தகவலில் பேரில் போலீஸ் படை, சிஎன்கே சாலை லாட்ஜில் சோதனை நடத்தி, 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அப்போது கையும் களவுமாக சிக்கிய டிராவல்ஸ் உரிமையாளர் சபீக் ரகுமானின் பின்னணியை போலீசார் நோண்ட, வழக்கில் அடுத்தடுத்து விழுந்தன பகீர் விக்கெட்டுகள்.

தஞ்சாவூர் விவசாயி...
சபீக் ரகுமானிடம் விசாரணையை துரிதப்படுத்தியபோது தான், தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரனுக்கு உள்ள தொடர்பு வெளியானது. தஞ்சாவூருக்கு விரைந்த தனிப்படை, விவசாயி என்ற போர்வையில் இருந்த ரவிச்சந்திரனை அமுக்கியது. அவரிடம் நடத்திய சோதனையில், 22 லட்சத்து 80 ஆயிரம் உண்மையான ரூபாய் நோட்டுகள், 9 ஆயிரம் கள்ள நோட்டுகள் மற்றும் 4 பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கடந்த 2015ல் மலேசியாவிலிருந்து தமிழகம் வந்த ரவிச்சந்திரன், அங்கு கால் டாக்ஸி ஓட்டியபோது சர்வதேச கள்ளநோட்டு கும்பலோடு தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது.

மலேசியாவுக்கு தப்பிய பெண்...
மலேசியாவில் 25 ஆண்டுகளாக செட்டிலாகி இருக்கும் தனது அண்ணன் ரமேஷின் பின்னணியை பயன்படுத்தி, இந்த நெட்வொட்க்கை கச்சிதமாக இயக்கியுள்ளார் ரவிச்சந்திரன். அவரும் மலேசியாவைச் சேர்ந்த பரிமளா என்ற பெண்ணும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதை கண்டறிந்த போலீசார், கள்ளநோட்டுகளை மலேசியாவிலிருந்து கடத்தி வந்த பரிமளா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு மாதமாக முகாமிட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். ரவிச்சந்திரனிடம் கள்ள நோட்டுகளை ஒப்படைத்த அவர், போலீஸ் விசாரணை தொடங்கும் 2 நாட்களுக்கு முன்பே நைசாக மலேசியாவுக்கு தப்பியதும் தெரியவந்துள்ளது.

ஒரு கோடி கள்ள நோட்டு
ஆனால், பரிமளா தங்கியிருந்த அதே அறையில் தங்கியிருந்த மலேசிய தோழி புவனேஸ்வரி, 16ஆம் தேதி இரவு சென்னை ஏர்போர்ட்டில் மலேசியாவுக்கு பறக்க முயன்றபோது போலீஸாரிடம் வசமாக சிக்கினார். இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரையிலான கள்ள நோட்டுகளை இந்த மலேசிய கும்பல் தமிழகத்திற்குள் கொண்டு வந்திருக்கலாம் என உளவுத்துறை சந்தேகிக்கிறது.

உளவுத்துறை தீவிர விசாரணை
மலேசியாவில் இருந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்த து யார்? ஏன் தமிழகத்தை குறி வைத்து இந்த கும்பல் இயங்கியது? நாட்டின் பிற மாநிலங்களும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளனவா? இந்த கும்பலுக்கு பின்னணியில் உள்ளது யார்?

இந்தியாவின் பொருளாதாரத்தை குறி வைத்து கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுக்கும் பின்னணியில் சர்வதேச அரசியல் உள்ளதா? என பல கேள்விகளுக்கு விடை தேட, தமிழக சிபிசிஐடி போலீஸாருடன், மத்தியஉளவுத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தப்பியோடிய பரிமளா சிக்கினால் மட்டுமே இந்த சர்வதேச நெட்வொர்க்கின் முழு முகமூடியும் கிழிபடும் என்கிறது காவல்துறை வட்டாரம்.