Also Watch
Read this
By: Web Team
விருத்தாசலத்தில், சீமான் காரை வழிமறித்த திமுக நிர்வாகியை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சேர்ந்து, சூழ்ந்து கொண்டு இருட்டில் வைத்து வெளுத்து வாங்கிய நிலையில், உடன் சென்ற சிலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அவர்களும் தங்களுடைய பங்குக்கு சரமாரியாக தாக்கி ஆத்திரத்தை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. காரில் இருந்து இறங்கி வேகமாக சென்ற சீமானும் தாக்கியதாக கூறப்படும் நிலையில், என்ன நடந்தது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பின்னர், திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்து சிறிது தூரம் சென்ற போது திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரங்கநாதன், சீமான் சென்ற காரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த உடன் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், ரங்கநாதனை பிடித்து அடித்து இழுத்து சென்றனர்.
உடனே காரில் இருந்து, சீமான் உள்ளிட்டோரும் இறங்கி ரங்கநாதனை நோக்கி விரைந்து சென்றனர். அனைவரும் சேர்ந்து இருட்டில் வைத்து ரங்கநாதனை வெளுத்து வாங்க, உடன் சென்ற சிலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில், அவர்களும் சேர்ந்து அவர்களுடைய பங்குக்கு ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். நிர்வாகிகளுடன் சேர்ந்து சீமானும் தாக்கியதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று சீமானை காப்பாற்ற முயன்ற நிலையில் ரங்கநாதனை நாம் தமிழர் கட்சியினர் ஆவேசமாக தாக்கி இழுத்து சென்றதால் தடுமாறினர்.
ஒரு வழியாக சீமானை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்த பின்னர் ரங்கநாதனை விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, ரங்கநாதனை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் விருத்தாசலம் புற வழிச்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோஷங்களை எழுப்பிய படி ஊர்வலமாக சென்றதால் சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமானின் வாகனத்தை தாக்கியதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யக்கோரி புகார் மனு அளித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved