கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் : தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது. 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அலுவலகம் முன்பாக கூடாரம் அமைத்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 313-வது வாக்குறுதியான 'காலமுறை ஊதியம்' வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாதம் ₹6,750 ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.தற்போது சத்துணவுப் பணியாளர்களுக்கு ₹7,700 மற்றும் உதவியாளர்களுக்கு ₹4,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.இந்த மிகக்குறைந்த ஊதியத்திலும் அரசுக்கு வரி செலுத்தி வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பணி பாதுகாப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட 13 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.தங்கள் போராட்டத்தைப் பற்றி எந்தவொரு அரசு அதிகாரியும் இதுவரை நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், தங்களை அலட்சியப்படுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். "முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை, தாரமணியை விட்டு நகரப் போவதில்லை. எங்கள் வாழ்வாதாரப் போராட்டம் கோரிக்கைகள் வெல்லும் வரை தொடரும்," என போராட்டக் குழுவினர் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தரமணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Related Link யமஹா ஷோரூமின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு