Also Watch
Read this
By: Manigandan Raja
சென்னையில் இருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருவள்ளூர் 6ஆவது வார்டு கவுன்சிலர் மற்றும் அவரது வழக்கறிஞர் நண்பரையும் போலீசார் கைது செய்தனர். விமான பணிப்பெண்ணின் தோளை தொட்டுப் பேசியும், மடியில் அமருமாறும் எல்லை மீறிய கவுன்சிலரையும் அவரது நண்பரையும் போலீசார் 6 நாட்களுக்கு பிறகு சுற்றி வளைத்தனர்.

பணிப்பெண்ணிடம் தரங்கெட்ட வேலை
விமானத்தில் பணிப்பெண்ணிடம் தரங்கெட்ட வேலையில் ஈடுபட்ட கவுன்சிலரும் அவரது வழக்கறிஞர் நண்பரும் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த 25ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் சென்றது. இதில் ஏறிய இருவர் 25 வயதான விமான பணிப்பெண்ணை ”மிட்டாய் கடையை பார்த்தது போல” குறுகுறுவென பார்த்தபடியே ஏறி உள்ளனர். ஏறும்போதே மதுபோதையில் இருந்த அவர்கள், விமான பணிப்பெண்ணின் தோளை தொட்டு பேசி உள்ளனர். அப்போதே, முகம் சுளித்த விமானப் பணிப்பெண் அவர்களின் அருகில் செல்லாமல் தவிர்த்துள்ளார். ஆனாலும், விடாத அந்த இருவர் உனக்கு எந்த ஊர்? என ஒருமையில் அழைத்து கேட்டுள்ளனர். அதற்கு மதுரை என அந்த விமான பணிப்பெண் பதில் சொல்ல, ஆண்டிப்பட்டியா கல்லுப்பட்டியா? என கேலி கிண்டல் செய்து, சிரித்ததோடு மீண்டும் தோளை தொட்டுள்ளனர்.

கவுன்சிலரும் வழக்கறிஞரும்
மது போதையில் எல்லைமீறிய அவர்கள் ஒருகட்டத்தில் விமான பணிப்பெண்ணை தங்கள் மடியில் அமருமாறு வற்புறுத்தி உள்ளனர். அதுவரை பொறுமையாக இருந்த அந்த பணிப்பெண் அதன்பிறகு மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் அந்த இருவர் மீதும் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது திருவள்ளூர் 6ஆவது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு என்பது தெரிய வந்தது. அதேபோல், தியாகு வழக்கறிஞர் எனவும் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருவதாகவும் தெரிய வந்தது.

விமான நிலையத்தில் காத்திருந்து கைது
இதனை தொடர்ந்து பிரபாகரனையும், அவரது நண்பர் தியாகுவையும் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் உத்தரவிட்டனர். சம்மன் அனுப்பியும் இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இருவர் மீதும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடும் வேலையில் ஈடுபட்டனர். இதனிடையே, டெல்லி சென்றிருந்த இருவரும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு மார்ச் 2ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், குறிப்பிட்ட விமானத்தில் இருந்து இறங்கிய கவுன்சிலரையும், அவரது நண்பரையும் சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் உள்ளூர் மக்கள் மத்தியில் நல்லபெயர் எடுத்து, வாக்குகளை சேகரித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிரபாகரன், விமான பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு பெயரை டேமேஜ் செய்து வைத்துள்ளது அவரது ஆதரவாளர்களையும், கட்சியினரையும் அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளதாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved