Also Watch
Read this
சென்னை பெரம்பூரை தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், வழிநெடுகிலும் தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். 41 உயிர்கள் பலியான கரூர் துயர சம்பவமும் சூழ்ச்சிதான் என்றும், ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் இருப்பதும் கூட்டு சூழ்ச்சிதான் எனவும் குற்றம்சாட்டிய விஜய், ”திமுக பாதி கதர் கூட்டணி, பாதி காவி கூட்டணி” என்றும் விளாசி உள்ளார்.

திருச்சியில் விஜய்...
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் அங்கு பிரச்சாரமும் மேற்கொண்டார்.

இந்நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் வந்தார் விஜய். விமான நிலையத்திலேயே திக்குமுக்காட வைத்த தொண்டர்களின் வரவேற்பு, பூஸ்ட் குடித்ததுபோல புது தெம்பை கொடுக்க, பிரச்சார வாகனத்தில் விஜய் புறப்பட்டார். செல்லும்வழியில் திருச்சியே திணறும் வகையில் பிரம்மாண்ட ரோடு ஷோவும் நடந்தது.

இறங்கிய விஜய், வைரல்
விஜய் வாகனத்தின் பின்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பைக்குகளில் அணிவகுத்து வந்தனர். ஏற்கனவே விஜய் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்த தொண்டர்கள், அவர் மீது தவெக கொடிகளையும், துண்டுகளையும் வீசி தங்கள் அன்பின் மிகுதியை வெளிப்படுத்தினர்.

இதையெல்லாம் உள்ளூர ரசித்து புன்னகையை பொழிந்த விஜய், தான் அமர்ந்திருந்த முன்சீட்டில் இருந்து எழுந்து பிரச்சார வேனின் டாப்புக்கு சென்று தொண்டர்களின் அன்புமழையில் நனைந்தார். அந்தநேரத்தில், பைக்கில் சென்ற பெண் ஒருவர் தவறி கீழே விழ, உடனே பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி சென்று விஜய் நலம் விசாரித்ததோடு, பார்த்து செல்லுமாறு அக்கறையுடன் கூறிவிட்டு சென்றார்.

இதனை தொடர்ந்து பாலக்கரை மாநகராட்சி அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், திறந்த வேனில் நின்றபடியே மரக்கடை பகுதிக்கு சென்று, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும், கையெடுத்து கும்பிட்டும் மரியாதை செய்தார்.

என் நெஞ்சில் குடியிருக்கும் திருச்சி மக்களே
இதனையடுத்து, என் நெஞ்சில் குடியிருக்கும் திருச்சி மக்களே... என பேசி பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய், கேஸ் சிலிண்டர் பிரச்சனையால் டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய - மாநில அரசுகள் ஆகிய இரண்டும் தான் காரணம் என குற்றம் சாட்டியதோடு, தனக்கு ஒரு பிரச்சனை என்றால் டெல்லிக்கு பறக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கும் டெல்லிக்கு பறக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

கேள்விக்கு மேல் கேள்வி
கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் தருவதாக கூறியது என்னாச்சு?, கரும்புக்கு ஆதார விலையாக 4 ஆயிரம் தருவதாக கூறியது என்னாச்சு? ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒருகிலோ சர்க்கரை மற்றும் உளுந்தம்பருப்பு தருவதாக கூறியது என்னாச்சு? நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக்கூறியது என்னாச்சு என விஜய் கேள்விக்குமேல் கேள்வி எழுப்பினார்.

எதையெல்லாம் செய்ய மாட்டோரோ அதையெல்லாம் வாக்குறுதியாக கொடுப்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேலையே என சாடிய விஜய், ஜிஎஸ்டி போன்று எஸ்எஸ்டி அதாவது ஸ்டாலின் சார் டேக்ஸ் பற்றி வாயை திறப்பதே கிடையாது எனவும் அப்படியென்றால் அந்த டேக்ஸ் உள்ளது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்களா? எனவும் விளாசினார்.

பாடல் பாடி உற்சாகம்
மொத்தத்தில் திமுகவே யூஸ்லெஸ் அரசு என்றும், திமுக பாதி கதர் கூட்டணி, மீதி காவி கூட்டணி எனவும் விமர்சித்த விஜய், கரூர் சம்பவமும் சூழ்ச்சிதான், தனது கடைசிபடமான ஜனநாயகனை வெளியிடாமல் தடுப்பதும் கூட்டு சூழ்ச்சிதான் என்றார்.

இறுதியாக, யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெகவின் பிரச்சார பாடலான ”நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு, கொஞ்சம் நவுந்தேனா இங்க 8 கோடி பேரு” என்ற பாட்டை பாடி, வாக்கு சேகரிக்க, தவெக தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved