Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த மருதம்பட்டியில் குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அந்த பகுதியில் 3 குவாரிகள் இயங்கி வரும் நிலையில் மேலும் புதிதாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்து கல்குவாரி செயல்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவந்தாம்பட்டி, ஆலம்பட்டி, மருதம்பட்டி, தவசிபட்டி, தெத்தூர், நைநான்பட்டி, மான்பாஞ்சாம்பட்டி, உசிலம்பட்டி, நாட்டார்பட்டி, அக்கியம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பி மக்கள் வாழும் நிலையில் குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதுடன் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலையும் கல்குவாரியை சுற்றி உள்ள கிராமங்கள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்.

உடனடியாக கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்து கல்குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று கூறி 10 கிராமங்களை சேர்ந்த நுற்றுக்கணக்கான மக்கள் கல்லுப்பட்டியில் உள்ள மருங்காபுரி வட்டாட்சியர்
அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆனால் சில நிமிடங்களுக்கு ஒரு டிப்பர் லாரி குவாரியில் இருந்து வந்து செல்வதாகவும் இதனால் விபத்து ஏற்படுவதோடு, கல்குவாரியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக கல்குவாரியை மூடிட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது வரும் நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.