Also Watch
Read this
By: Manigandan Raja

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தண்டாயுதபாணி மடத்திற்குச் சொந்தமான, சுமார் ₹100 கோடி சந்தை மதிப்புள்ள நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று 7வது நாளாக ஆவணங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு தொடர்பாகத் திண்டுக்கல், பழனி மற்றும் பிற மாவட்டங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் தங்களது விசாரணையை முழு வீச்சுடன் முடுக்கிவிட்டுள்ளனர். முன்னதாக நேற்று, பழனி கோவில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, முன்னாள் வட்டாட்சியர் மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் சிவனேசன் ஆகிய நான்கு பேரிடம் சுமார் 6.30 மணி நேரம் சிபிசிஐடி
அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது,முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தின் உண்மைத் தன்மை, தண்டாயுதபாணி திருக்கோவில் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நிலத்தின் பயன்பாடு, நிலம் தொடர்பாக ஏற்கனவே நடந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட கோப்புகள் மற்றும் மூல ஆவணங்கள் குறித்துப் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று திண்டுக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் ஆய்வாளர் சந்தானலட்சுமி தலைமையில் அதிகாரிகள் 7வது நாளாக பழனி கோயில் ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பழனி முன்னாள் தாசில்தார் பிரசன்னா, தற்போதைய தாசில்தார் சஞ்சய் காந்தி மற்றும் நில அளவையர் செல்லதுரை ஆகியோர் உதவி செய்து வருகின்றனர்.
காலை 11.45 மணி அளவில் வருவாய்த் துறை அலுவலர்களான முன்னாள் தாசில்தார் பிரசன்னா, தற்போதைய தாசில்தார் சஞ்சய் காந்தி மற்றும் நில அளவையர் செல்லதுரை என 3 பேர் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் வருகை தந்து, முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட நிலம் தொடர்பான கோப்புகள் எந்தெந்தக் காலகட்டங்களில் வருவாய்த் துறையில் எந்த வகைப்பாட்டில் (Land Classification) இருந்தன என்பது குறித்தும், அதற்கான ஆதார ஆவணங்களைப் பெற்று சிபிசிஐடி அதிகாரிகள் கொடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.