Also Watch
Read this
அம்மா உணவகத்தின் முதுகெலும்பாக திகழும் பெண் பணியாளர்களின் நிஜ வாழ்க்கை, பணியிடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் நடத்தப்படும் மனித நேயமற்ற அணுகுமுறைகள் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த உணவகங்களுக்கு லாபத்தையும், பெருமையையும் தேடித்தரும் பெண் பணியாளர்களின் கண்ணீரையும், தற்போதைய அவல நிலையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த செய்தி தொகுப்பு.

அம்மா உணவகங்களில்...
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசிப்பிணியைப் போக்கி, பல்லாயிரக்கணக்கானோருக்கு நாள்தோறும் மலிவு விலையில் உணவளித்து வரும் உன்னதத் திட்டம் அம்மா உணவகம். தலைநகர் சென்னையில் மட்டும் 383 இடங்களில் அம்மா உணவங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, அம்மா உணவகங்களில் சுவையான, தரமான உணவை வழங்க அதிரடி உத்தரவு பிறப்பித்ததன் விளைவாக, கடந்த காலங்களை விட அம்மா உணவங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

அதிகாலை முதல் இரவு வரை
அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட முக்கிய காரணமே, அதிகாலை முதல் இரவு வரை உழைக்கும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண் பணியாளர்கள் தான். தங்களின் உழைப்பை முழுமையாகத் தந்து, பசியைப் போக்கும் இந்த பெண் பணியாளர்களின் வாழ்க்கை, பணியிடச் சூழல் திருப்திகரமாக உள்ளதா? என நியூஸ் தமிழ் செய்திக்குழு அதிரடி கள ஆய்வு நடத்தியது. இதில், அவர்கள் கண்ணீரிலும் கவலையிலும் மூழ்கிக் கிடக்கின்றனர் என்ற கசப்பான உண்மை வெளிச்சத்திற்கு வந்ததோடு, பணியில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்னனென்ன என்பதும் தெரியவந்தது.

ஏதோ ஒரு இடத்தில் இருந்து...
அம்மா உணவகங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு,கோதுமை மாவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை அந்தந்த உணவகங்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்காமல், ஏதோ ஒரு மைய இடத்தில் மொத்தமாக இறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தங்களது உணவகங்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்ல மாநகராட்சி தரப்பில் வண்டி வாடகை எதுவும் வழங்கப்படாதால், பெண் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து, தங்களது இருசக்கர வாகனங்களிலேயே ஆபத்தான முறையில் கனமான மூட்டைகளை ஏற்றி வரும் நிலை தொடர்வதாக கூறப்படுகிறது.

உணவகங்களில் சாப்பிடும் தட்டு, பாத்திரங்கள் மற்றும் காய்கறி கழுவும் இடங்கள் அனைத்தும் பொதுமக்களுக்காகத் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், நாள் முழுவதும் நின்று கொண்டு வேலை பார்க்கும் பெண் பணியாளர்களுக்கு ஒரு முறையான கழிவறை வசதி கூட இல்லை என்பது தான் கொடுமையே.

கடந்த 13 ஆண்டுகளாக...
அன்றாடத் தேவைக்கான விலைவாசி விண்ணைத் தொடும் இந்த காலகட்டத்தில், விடிய விடிய உழைக்கும் இப்பெண்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் தினக்கூலி வெறும் ரூ.325 மட்டுமே. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு சமீபத்தில் ஊதியம் உயர்த்தப்பட்டு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ள நிலையில், கடந்த 13 ஆண்டுகளாக அம்மா உணவகப் பெண்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் கூட கூலி உயர்த்தப்படவில்லை என்பது வேதனையின் உச்சமே.

13 ஆண்டு கால உழைப்பிற்குப் பிறகும், இந்த சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு தங்களது குடும்பத்தை எப்படிக் கொண்டு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர் இப்பெண்கள்.

பணி பாதுகாப்பு கேள்விக்குறி
போதிய ஊதியம் இல்லாத காரணத்தாலும், பணி பாதுகாப்பு இல்லாததாலும் பல பெண்கள் இந்த வேலையை விட்டு விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு உணவகத்தில் 10 முதல் 12 பேர் வரை வேலை பார்த்த இடத்தில், இப்போது வெறும் 8 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் சுழற்சி முறையில் ஒட்டுமொத்த வேலைகளையும் தங்களின் தோள்களில் சுமக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இதுகுறித்து, கேமராவுக்கு முன்னால் பேச அஞ்சிய பணியாளர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தைக் கண்ணீரோடு பகிர்ந்து கொண்டனர்.

வெளியில் சொல்லக்கூடாது...
சமைப்பது, பரிமாறுவது, பாத்திரங்களைக் கழுவுவது, பொருட்களைத் தூக்கி வருவது என அத்தனை வேலைகளையும் தங்களே செய்வதால், கடும் உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு ஒரு நிலையான ஊதியம் வழங்க வேண்டும், பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் தங்களது நியாயமான கோரிக்கைகளை வெளியிலோ அல்லது ஊடகங்களுக்கோ சொல்லக் கூடாது என அம்மா உணவக அதிகாரிகள், தங்களை கடுமையாக மிரட்டுவதாகப் புகார் தெரிவித்தனர்.

இதுவே கோரிக்கை...
கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடக் கூடாது, தொழிலாளர் சங்கம் வைக்கக் கூடாது என அதிகாரிகள் மிரட்டுவதாகவும், அடிமைகளைப் போல தங்களை நடத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட அச்சாணியாக விளங்கும் இந்த ஏழைப் பெண் பணியாளர்களின் கண்ணீரையும் துடைக்க வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக உள்ளது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் சந்தோஷ்குமார் உடன் செய்தியாளர் பாஸ்கர் பாண்டியன்...