Also Watch
Read this
ஒரு சின்ன அலட்சியம் உங்களது, உயிரையே பறிக்கலாம். நீங்கள் தினமும் கடந்து போகும் அதே தெரு நாய், உங்களையோ உங்களது குழந்தையையோ கடித்தால், என்ன நடக்கும் என்று யோசித்து பார்த்து உள்ளீர்களா? இது பயமுறுத்தும் வார்த்தைகள் அல்ல. தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை.

நாய் கடித்தால்...
கடந்த ஒரே ஆண்டில் மட்டும், தமிழ்நாட்டில் ஏழரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்து குதறி உள்ளது. கொடூரமான ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 பேர் சிகிச்சை அளித்தும், காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். நாய் கடித்த உடனே செய்கிற சின்ன தவறு தான், ரேபிஸ் நோய்க்கு வழி வகுக்கிறது, உயிரைப் பறிக்கிறது. எந்தெந்த மாவட்டத்தில் பாதிப்பு அதிகம்? நாய்கள் ஏன் திடீர் என்று ஆக்ரோஷமாக மாறுகிறது? நாய் கடித்தால் முதல் 15 நிமிடங்களில் செய்ய வேண்டிய கட்டாய முதலுதவி என்ன?

அதிகரிக்கும் எண்ணிக்கை
பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களைப் பார்த்தால், அச்சம் தான் வருகிறது. கடந்த 2025 ஜூலை முதல் 2026 ஜூன் வரையிலான ஒரே ஆண்டில், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,53,569 பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2025 ஜூலை - டிசம்பர் வரை 6 மாதத்தில் 3,28,696 நபர்களை நாய் கடித்து உள்ளது. இதில், ரேபிஸ் நோயால் 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 2026 ஜனவரி - ஜூன் வரைக்கும் 6 மாதத்தில், இந்த எண்ணிக்கை இன்னும் எகிறி 4,24,873 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழப்பு 24 ஆக அதிகரித்து உள்ளது.

எந்த மாவட்டத்தில் பாதிப்பு அதிகம்?
* தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டத்தில் தான், அதிகபட்சமாக 46,500 பேர் பாதிக்கப்பட்டு, 6 பேர் பலியாகி உள்ளனர்.
* அடுத்து, திருச்சி மாவட்டத்தில் 36,595 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.
* திருவள்ளூரில், 33,854 பேர் பாதிக்கப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

* தலைநகர் சென்னையில், 18,089 நபர்களை நாய் கடித்து, 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
* காஞ்சிபுரத்தில், 26,816 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
* செங்கல்பட்டில் 26,543 பேர் பாதிக்கப்பட, நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை.
* மாநிலத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் தான் 3,572 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், உயிரிழப்பு இல்லை.

19 லட்சம் தெரு நாய்கள்...
தமிழ்நாட்டில், சுமாராக 19 லட்சம் தெரு நாய்களும், 8 லட்சம் வளர்ப்பு நாய்களும் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 1.81 லட்சம் தெரு நாய்களும், 85,000 வளர்ப்பு நாய்களும் உள்ளன.
நாய்கள் ஏன் திடீரென்று மனிதர்களைக் கடிக்கிறது? என்ன காரணம்?
கால்நடை மருத்துவர்கள் சில முக்கியமான காரணங்களைச் சொல்கின்றனர். மனிதர்களுக்கு கோபம் வந்தால், ‘நாய் மாதிரி ஏன் கத்துகிறாய்?’ என்று கேட்பதுண்டு. நாய்களுக்கு கோபம் வந்தால்...?

நாய்களுக்கு கோபம் வந்தால்...
anxiety தான் காரணம். கோபத்தால் தான் நாய்களும் இப்படி கடிக்க ஆரம்பிக்கிறது என்று சொல்ல முடியுமா? தெரு நாய்களுக்குச் சரியான உணவோ, குடிக்க தண்ணீரோ கிடைக்காத போது, அது ஆக்ரோஷமாகிறது. முக்கியமாக, வெயில் காலத்தில் வெப்பம் காரணமாகவும், தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காத போதும், நாய்களுக்கு கடிக்கும் குணம் அதிகமாகிறது. நோய்களால் ஏற்படும் வலி மற்றும் தெருவில் அதிக சத்தத்தால், நாய்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி மனுதர்களை கடிக்கிறது.

நாய்கள் கடித்தால்...
நாய் கடித்த இடத்தில் லேசான எரிச்சல், வலி, காய்ச்சல், தலைவலி, உடம்பு சோர்வு, தசை வலி, வாந்தி இதெல்லாம் ஆரம்பகால அறிகுறி. ஆனால், ஒருவேளை ரேபிஸ் வைரஸ் உடம்பில் பரவினால் என்ன ஆகும்? ஹைட்றோபோபியா என கூறப்படும் தண்ணீரை பார்த்தாலே பயம் வரும். ஏரோபோபியா என கூறப்படும் காற்றடித்தால் பயம் வரும்.

வாயில் இருந்து அதிக அளவு உமிழ்நீர் சுரக்கும். அளவுக்கு அதிகமான கோபம், வன்முறை, தூக்கமின்மை, மனக்குழப்பம் மற்றும் கற்பனையான பயங்கள் ஏற்படும். ரேபிஸ் நோய்க்கான அறிகுறி ஒருவருக்கு, வெளியில் தெரிய ஆரம்பித்தால், அதற்குப் பிறகு அவர்களைக் காப்பாற்றவே முடியாது. அதனால், அறிகுறி வரும் வரை காத்திருக்கவே கூடாது.

என்ன செய்ய வேண்டும்?
மருத்துவர்கள் கூறும் முதலுதவி வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக மனதில் கொள்ள வேண்டும். நாய் கடித்த உடனே, கடித்த இடத்தில் இருக்கும் நாயோட உமிழ்நீரை முழுமையாக அகற்ற, சோப்பு போட்டு ஓடும் குழாய் நீரில், குறைந்தது 15 நிமிடங்கள் நன்றாக கழுவ வேண்டும். அது தெரு நாயோ, ஆசையாக வளர்க்கும் வீட்டு நாய்க்குட்டியோ... சின்ன கீறல் அல்லது லேசான கடியாக இருந்தாலும் அலட்சியப்படுத்த கூடாது. அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது மருத்துவமனைக்கோ சென்று, மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களில் தவறாமல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வே ஆரோக்கியம்...