Also Watch
Read this
சேலத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் தமிழக அரசின் ஆவின் நெய்க்கு பதிலாக, கர்நாடக மாநில கூட்டுறவு அமைப்பான நந்தினி நெய் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே பால், வெண்ணெய், நெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க ஆவின் மொத்த விநியோகஸ்தர்களே லிட்டருக்கு 80 ரூபாய் கூடுதல் விலையுடைய கர்நாடக நெய்யை விநியோகித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடை ஊழியர்கள் வேதனை
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே, ஆவின் தயாரிப்புகளான பால், வெண்ணெய் மற்றும் நெய்க்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக, கோரிமேடு ஆவின் பாலகத்தில் ஆவின் நெய் முழுமையாக தீர்ந்துவிட்டது. ஆவினை நாடிவரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக் கூடாது என்பதற்காகவே, வேறு வழியின்றி கர்நாடக மாநில நந்தினி நெய்யை வாங்கி விற்பனை செய்து வருவதாக அங்குள்ள கடை ஊழியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அதிர்ச்சி தகவல்கள்
இதில், மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த கடைகளுக்கு கர்நாடகாவின் நந்தினி நெய்யை சப்ளை செய்வதே ஆவினின் அதிகாரப்பூர்வ மொத்த விநியோகஸ்தர்கள் தான். ஆவின் நிர்வாகத்திடம் இருந்து போதியளவில் நெய், வெண்ணெய் விநியோகம் செய்யப்படாததால், கடைகளை தொடர்ந்து நடத்தவும், வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் மொத்த விநியோகஸ்தர்களே நந்தினி நெய்யை கொள்முதல் செய்து பாலகங்களுக்கு அனுப்பி வைப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூடுதல் விலைக்கு...
இது ஒருபுறமிருக்க, விலை உயர்வு சாதாரண மக்களுக்கு பெரிய அடியாக விழுந்து உள்ளது. தமிழக ஆவின் நெய்யின் விலையை காட்டிலும், கர்நாடக நந்தினி நெய்யின் விலை லிட்டருக்கு 80 ரூபாய் வரை அதிகம். நெய் தட்டுப்பாடு காரணமாக, வேறு வழியே இல்லாமல் மக்கள் கூடுதல் பணம் கொடுத்து நந்தினி நெய்யை வாங்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடும் பால் தட்டுப்பாடு
நெய் மட்டுமல்லாது, பால் விநியோகத்திலும் கடும் பாதிப்பு நிலவுகிறது. சேலத்தில் உள்ள ஒவ்வொரு ஆவின் பாலகத்திற்கும் நாளொன்றுக்கு வழக்கமாக வரும் பாலின் அளவில் 100 முதல் 200 லிட்டர் வரை தட்டுப்பாடு நிலவுவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். வழக்கமாக வாரத்திற்கு 10 முதல் 20 லிட்டர் வரை ஆவின் நெய் விற்பனை செய்யும் சிறு வணிகர்கள், தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
தமிழகத்தின் அடையாளமாக இருக்கும் ஆவின் பாலகங்களிலேயே பக்கத்து மாநில நெய் விற்கப்படும் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

எனவே, தமிழக அரசும் ஆவின் நிர்வாகமும் உடனடியாக இதில் தலையிட்டு, பால் மற்றும் நெய் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சேலம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved