Also Watch
Read this
Posted on: Jan 28, 2026 06:26 AM
By: Manigandan Raja
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தமது சொந்த தொகுதியான பாராமதியில் நடைபெறும் கட்சி நிகழ்வுக்காக சென்ற போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
சொந்த தொகுதிக்கு பயணம்
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார், விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அஜித் பவாருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய், பார்த் பவார் என்ற மகன்களும் உள்ளனர். முன்னதாக, அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து பாரமதிக்கு ஒரு சிறிய ரக விமானத்தில் பயணப்பட்டார். அவருடன் உதவியாளர்கள் இருவர் உள்பட 5 பேர் இருந்துள்ளனர்.
எதிர்பாராத திடீர் விபத்து, அதிர்ச்சி
இந்நிலையில், அவர் சென்ற விமானம் இன்று காலை சரியாக 8.45 மணிக்கு விபத்துக்குள்ளானது. பாராமதியில் விமானம் தரை இறங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த அஜித் பவார்?
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் இவர். முதன்முதலில் 1991ஆம் ஆண்டில் பாராமதி மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1995, 1999, 2004, 2009, 2014 என தொடர்ச்சியாக அத்தொகுதியை அவர் தக்கவைத்தார்.
ஆறு முறை துணை முதல்வர்
2019ஆம் ஆண்டில் அக்கட்சிக்குள் பூசல் ஏற்பட்டபோது தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கான உரிமையை கோரி கட்சி மற்றும் சின்னத்தை தக்கவைத்துக் கொண்டவர். அஜித் பவார், மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். பல்வேறு அரசுகளின் கீழ் 6 முறை துணை முதல்வராக இருந்துள்ளார். மகாராஷ்டிராவில் நீண்ட காலம் துணை முதல்வராக இருந்தவர்.
இரங்கல் செய்தி
அவரது மறைவுக்கு மகாராஷ்டிரா அரசியல் தலைவர்களும் தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved