Also Watch
Read this
தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சதை வளர்ந்ததாக மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 14 வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கணவனை இழந்து தனியாளாக வளர்த்து வந்த மகனும் உயிரிழந்தது பெற்ற தாய்க்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனுக்கு அறுவை சிகிச்சை
குடித்து குடித்து கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில் 14 வருடமாக அரும்பாடுபட்டு வளர்த்த பிள்ளையையும் எமனிடம் தூக்கி கொடுத்துவிட்டு பரிதவிக்கும் தாய்க்கு என்ன ஆறுதல் கூறி தேற்றுவது?

தேனி மாவட்டம், சருத்துப்பட்டியை சேர்ந்த சுதா என்பவரின் 14 வயது மகன் நிவாஸ் குமார். இந்த சிறுவனுக்கு அடிக்கடி சளி பிடித்து வந்ததோடு, மூக்கில் வலி இருந்ததால், பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது தாய் சிகிச்சை பார்த்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூக்கில் சிறிதளவு சதை வளர்ந்திருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்திருக்கின்றனர். அதனால் விசனம் அடைந்த அவரது தாய், பிரச்சனை சரியானால் போதுமென நினைத்து அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக் கொண்டார்.

அறுபது நாட்களாக...
கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிவாஸ் குமாருக்கு மருத்துவர்கள் குறித்த தேதியில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அப்போது சுவாச குழாயில் செலுத்த வேண்டிய டியூப்பை மருத்துவர் ஒருவர் உணவுக்குழாயில் செலுத்தியதாக சொல்லப்படும் நிலையில், அச்சிறுவன் நிலைகுலைந்ததோடு மட்டுமில்லாமல் கோமாவுக்கே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், பெரியகுளம் மருத்துவமனை மருத்துவர்கள் அச்சிறுவனை கானாவிளக்கு அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். கோமாவுக்கு சென்ற மகன், இன்று கண்விழிப்பான் நாளை கண்விழிப்பான் என்று 60 நாட்களாக காத்திருந்த தாய்க்கு இடியை இறக்கியதை போல் ஒரே அடியாக மகன் கண்மூடினான்.

மக்கள் கொந்தளிப்பு
குடித்து குடித்து கணவர் உயிரை விட்ட நிலையில், கூலி வேலைக்கு சென்று கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்த மகனும் உயிரிழந்த தகவலை கேட்டு அப்பெண் துடிதுடித்து போனார். தவறு செய்த மருத்துவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தாயும், அவரது உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உறுதுணையாக வழக்கறிஞர்களும் பெரிய குளம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை கிடைக்கும் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து தவறான சிகிச்சை குற்றச்சாட்டு மலை போல் குவியும் நிலையில், அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved