Also Watch
Read this
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரத்தன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் முதல் தோழமை கட்சிகள் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் பாயின்ட் பாயின்டாக பேசி தனது எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், ஆஸ்தான ஜோதிடர் என்றால் அரசுப்பதவிக்கு தகுதியா? எதன் அடிப்படையில் ஜோதிடருக்கு அரசுப்பதவி? அப்படியென்றால் ஜோதிடம் அரசுமயமாக்கப்படுகிறதா? என பலரும் கொந்தளிக்க, ரத்தன் பண்டிட் நியமனம் செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.

ரத்தன் பண்டிட் யார்?
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த ரத்தன் பண்டிட் ஆரம்பத்தில் சிறிய ஊர்களில் தான் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் அதிமுகவினருடன் ஏற்பட்ட பழக்கம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலதாவிற்கே ஆஸ்தான ஜோதிடராக மாறும் அளவுக்கு, அவருக்கு நல்லநேரம் கைகூடியது. அதன்பிறகு, டெல்லிக்கு பறந்த ரத்தன் பண்டிட் இந்திய அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை கணித்து கூறி உள்ளார். மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத்பவார் குடும்பத்திற்கும் இவர் ஜோதிடம் பார்த்ததாக கூறப்படும் நிலையில் அடுத்து சிங்கப்பூருக்கு சென்று ஒரு ஜோதிட நிறுவனத்தை தொடங்கி ஆன்லைனில் விவிஐபிக்களுக்கான ஒரு பிசியான ஜோதிடராக மாறினார்.

ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்
ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிடும் என்பது முதற்கொண்டு, வழக்கு ஒன்றில் பதவியை இழக்கும் நிலை வரும், 2016 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றால் 2017 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாட அவர் உயிரோடு இருக்கமாட்டார் என்பதுவரை பல விஷயங்களை ரத்தன் பண்டிட் கணித்துள்ளாராம். அந்தநேரத்தில் அவரது கணிப்பை அதிமுகவினர் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் ஜெயலலிதா மறைந்தபிறகு அதனை நம்பியதாக சொல்லப்படுகிறது. அப்படி ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்த ரத்தன் பண்டிட்டுடன் தவெக தலைவர் விஜய்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விஜய்க்கு வழிகாட்டிய பண்டிட்
விஜய் அரசியலில் கால் வைத்தால் வெற்றி நிச்சயம் என ரத்தன் பண்டிட் கூறியதாகவும், கட்சி பெயரிலும், முதல் மாநாடு நடக்கும் இடத்திலும் வி என்ற எழுத்து இடம்பெற வேண்டும் என கூறினாராம். அதன்படிதான் TVK என கட்சிப்பெயரும், விக்கிரவாண்டி என்ற முதல் மாநாட்டு இடமும் தேர்வானதாம். இவ்வளவு ஏன்? பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிட முடிவு செய்ததும் சரி. திருச்செந்தூர் முருகன் கோயில், சீரடி சாய்பாபா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு விஜய் சென்றதற்கு பின்னாலும் ரத்தன் பண்டிட்தான் உள்ளாராம்.

அரசு அதிகாரி ஆனார் பண்டிட்
கடைசியில் கணித்ததுபோலவே களம்கண்ட முதல் தேர்தலிலேயே விஜய்யும் வெற்றி பெற்றார். அதன்பிறகு விஜய்க்கு ஆலோசனை வழங்கும் ஆஸ்தான ஜோதிடராக மாறிய இவர், முதலமைச்சர் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அது எப்படி? ஒரு ஜோதிடர் அரசு அதிகாரியா? என்ன அடிப்படையில் அவருக்கு பதவி வழங்கப்பட்டது? ஒரு ஜோதிடருக்கு அரசு சிறப்பு அதிகாரி பணி தேவையா? அதை யாராவது விளக்க முடியுமா? பெரியாரை கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள த.வெ.க. அரசில் தனது ஜோதிடரை முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் நியமித்துள்ளது என்ன லாஜிக்? அப்படியானால் ஜோதிடத்தை நம்புங்கள் என அரசே சொல்கிறதா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் எதிர்ப்பு
ஜோதிடத்தை அரசுமயமாக்கக் கூடாது என்பதை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி தவெக அரசின் தோழமை கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின்போது பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். ரத்தன் பண்டிட் முதலமைச்சரின் ராஜகுரு என்றால் பர்சனலாக வைத்துக்கொள்ள வேண்டும், அரசவையில் அமர வைத்து அழகு பார்ப்பதா? என பாயின்ட் பாயின்டாக பேசினார்.

24 மணி நேரத்தில் வாபஸ்
இவரை போன்று மேலும் சிலர் ரத்தன் பண்டிட் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சை தொடர்ந்து இறுதியாக பேசிய விஜய், ரத்தன் பண்டிட் நியமனம் மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி, ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே அந்த நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. என்னதான் நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்டாலும் எதையும் யோசிக்காமல் ஒரு ஜோதிடரை நியமனம் செய்வதும், அதன் பிறகு வாபஸ் பெறுவதும் அரசியல் விளையாட்டா? ஒரு விஷயத்தை செய்யும்முன்பு ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டாமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved