Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 08:43 AM
துரந்தர்-2 திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அரசியல் தொடர்பாக ஒரு சார்பான காட்சிகள் இருப்பதால், திரையிடுவதை நிறுத்த வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.
அவசர முறையீடு
பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான திரைப்படம் ‘துரந்தர் 2’. கடந்த 19ஆம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக திரையரங்குகளில் இந்த திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட தடை கோரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வில் வழக்கறிஞர் ஷிலா என்பவர் அவசர முறையீடு செய்தார்.
தடை விதிக்க வேண்டும்
கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்த படத்தில் அரசியல் தொடர்பாகவும், ஒரு கட்சி சார்பான கருத்துக்கள் அதிகம் வலியுறுத்தப்படுவதாலும், ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
நீதிமன்றம் அறிவுறுத்தல்
தேர்தலுக்கு பின் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் மனுதாரர் தெரிவித்தார். இந்த முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, திரைப்படம் வெளியாகி விட்டது, மனுவாக தாக்கல் செய்து விட்டு, முறையீடு செய்யும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
‘துரந்தர் 2’ வசூல் வேகம் தாறுமாறாக உயர்வு
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர் 2: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் அதிரடி வசூலை குவித்து வருகிறது. முதல் வார இறுதியிலேயே படம் மிகப்பெரிய சாதனைகளை படைத்து உள்ளது. ஞாயிற்றுக்கிழமை 4ஆவது நாளில் மட்டும் சுமார் ரூ.110 முதல் ரூ.115 கோடி வரை வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மொத்த வசூல் ரூ.440 கோடியை கடந்து உள்ளது உலகளவில் வசூல் ரூ.690 கோடியை நெருங்கி உள்ளது. அமீர் கான் நடித்த ‘Dangal’ படத்தின் இந்திய வசூல் சாதனையை முறியடித்து உள்ளது. மிக விரைவில் ரூ.1,000 கோடி கிளப்பில் இடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved