2026 தமிழக சட்டமன்ற தேர்தலில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை தொடர்ச்சியாக மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என சொல்லி முதல்வர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து வருகிறார்.. ஆட்சியில் பங்கு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள், 2006ல் தமிழ்நாடு காங்கிரஸ் செய்த தவறை மீண்டும் இந்த முறை செய்யக் கூடாது என்றும் ஆட்சியில் பங்கு கேட்பது எங்களது உரிமை, காங்கிரஸ் வாக்குகளால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்று பேசி மாணிக்கம் தாகூர் திமுக கூட்டணியில் கலகக் குரல் எழுப்பி வருகிறார். உண்மையில் 2006 தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தயவால் தான் திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்ததா? 2006ல் என்ன நடந்தது என்பதை இந்த தருணத்தில் அலசி ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.என்ன நடந்தது 2006ல்?2006 தமிழக சட்டமன்ற தேர்தல், மாநில அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. மே 8, 2006 அன்று நடைபெற்ற இந்த தேர்தலில், 1952க்கு பிறகு முதல்முறையாக எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக தனித்து 96 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. திமுக கூட்டணியான காங்கிரஸ் 34 இடங்கள், பாமக 18 இடங்கள், இடதுசாரிகள் 15 இடங்களையும் பெற்றிருந்தன. எனவே, காங்கிரஎஸ் கட்சியின் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு திமுகவிறகு அவசியமாக இருந்தது என்பதையும், இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேடகாமல் இருந்தது தாங்கள் செய்த தவறு என்பதை தான் மாணிக்கம் தாக்கூர் தற்போது, 2006இல் செய்த தவறை மீண்டும் தாங்கள் செய்ய மாட்டோம் எனக் கூறி வருகிறார். திமுகவின் ஆதரவு காங்கிரசுக்கு தேவைப்பட்டதுஆனால், கணக்குபடி பார்த்தால் ஒருவேளை காங்கிரஸ் ஆதரவு இல்லையென்றாலும் மற்ற கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் இடதுசாரிகள் ஆதரவு மட்டும் இருந்தாலே திமுக கூட்டணி 129 இடங்களுடன் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களோடு ஆட்சியை பிடித்து இருக்கும். ஆனால், அந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காமல் இருந்ததற்கும், நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதற்கும் காரணம், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுகவின் ஆதரவு காங்கிரசுக்கு தேவைப்பட்டது. எனவே, மத்தியில் இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காக தமிழகத்தில், திமுக அரசுக்கு ஆட்சியில் பங்கு கேட்காமல் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதையே காங்கிரஸ் தியாகமாக கருதியது. புதுச்சேரியில் என்ன நிலை?புதுச்சேரி சட்டமன்றத்தில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன. 2006 தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 10 இடங்களை மட்டுமே வென்றது. ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுகவின் ஆதரவு காங்கிரசுக்கு மிக அத்தியாவசியமாக இருந்தது. திமுகவின் ஆதரவு இல்லையென்றால் காங்கிரஸால் அங்கு ஆட்சி அமைக்கவே முடியாது என்ற நிலை இருந்தது. புதுச்சேரியின் சில பகுதிகளில், குறிப்பாக நகர்ப்புறம் மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் திமுகவிற்கு நிலையான வாக்கு வங்கி இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பல தொகுதிகளில் வெற்றி பெற திமுகவின் களப்பணி மற்றும் வாக்குகள் பெரும் உதவியாக இருந்தன. திமுகவின் ஆதரவுதமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த சூழலில், அதன் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் அதே கூட்டணி ஆட்சியில் இருப்பது நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், காங்கிரஸ் 10 இடங்களை மட்டுமே பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்ததே தவிர, பெரும்பான்மை கட்சியாக இல்லை. எனவே, ஆட்சி அமைப்பதற்கும், அந்த ஆட்சியை ஐந்து ஆண்டுகள் தக்கவைப்பதற்கும் திமுகவின் 7 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு காங்கிரசுக்குத் தாரக மந்திரமாக இருந்தது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் 44 இடங்களை வென்று 19.31 வாக்கு சதவீதத்தை பெற்றது. இது காங்கிரஸ் வரலாற்றிலேயே மிக குறைவான இடங்களை பெற்ற தேர்தலாக அமைந்தது. அதே போல தமிழகத்தில் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் 4.4% வாக்கு சதவீத்தை மட்டுமே பெற்றது. தமிழ்நாட்டில் அந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமையவில்லை. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டதால் அதன் வாக்கு வங்கி கடுமையாக பாதிக்கப்பட்டது. 2019ல் என்ன நடந்தது?2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் 19.49%ம், தமிழக அளவில் 12.76% வாக்குகளும் பெற்றது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 9 இடங்கள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. 2014ல் தனித்து போட்டியிட்டபோது சுமார் 4.3% வாக்குகளை மட்டுமே பெற்ற காங்கிரஸ் 2019ல் திமுக கூட்டணியில் இணைந்ததால் அதன் வாக்கு சதவீதம் 12.76% ஆக உயர்ந்தது. இது கூட்டணியின் பலத்தையும், தொகுதிகளின் எண்ணிக்கையும் பொறுத்து மாறுபடும் என்பதை உறுதிப்படுத்தியது. 9க்கு 9 இடங்களிலும் வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் 21.19% வாக்குகளையும், 99 இடங்களையும் பிடித்தது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் காங்கிரஸ் கட்சி தனது வாக்கு சதவீதத்தை சுமார் 1.7% உயர்த்தியதுடன் இடங்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரித்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. தமிழநாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்று 9 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. ராகுல்காந்தி பிரச்சாரம்work from home அரசியல் செய்கிறார் விஜய் என்று விமர்சனங்கள் எழும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக தேசிய கட்சிகளின் தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவே மாட்டார்கள் என்ற நிலை இருக்கும் போதும், பிரதமர் மோடி 2014ல் 5 முறையும், 2019ல் 4 முறையும், 2024ல் 8 முறையும் தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்காக வந்துள்ளார். அதே நேரம் வெற்றி பெறும் கூட்டணியில் இருக்கும் ராகுல் காந்தியோ 2014, 2019, 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தலா 2 முறை மட்டுமே பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த வகையில் நியாயம்?இப்படியாக, முறையான பிரச்சாரத்தை கூட ராகுல் காந்தி மேற்கொள்ளாத நிலையில், திமுகவினர் அனைத்து சக்திகளையும் செலவிட்டு தேர்தல் தோறும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற்ற வைக்கிறார்கள். தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக, பாஜகவை விட குறைவான பூத் ஏஜெண்டுகளை வைத்துள்ள காங்கிரஸ், கட்டமைப்பை உருவாக்காமல், உழைப்பை செலுத்தாமல், அதிகாரத்தில் மட்டும் காங்கிரஸ் பங்கு கேட்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியே திமுகவினர் மத்தியில் உள்ளது. கட்சியில் பிளவு?தவெகவை காட்டி அரசியல் செய்து ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பதும், அதிக தொகுதிகளை கேட்பதும், மாணிக்கம் தாகூரின் பேச்சுகளும் திமுக தலைமையை கோபமடைய வைத்துள்ளதாக கூறப்படுறது. கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் கட்சியினர் கருத்து கூறக் கூடாது என டெல்லி தலைமை உத்தரவிட்ட பிறகும் மாணிக்கம் தாகூர் பேசி வருவதும், மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு எதிராக செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக விமர்சிப்பதும் அந்த கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. 2026 தேர்தலில் காங்கிரஸ் டெல்லி தலைமை எந்த முடிவை எடுத்தாலும், கட்சியில் ஒரு பிளவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதே அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கும் கருத்தாக இருக்கிறது. Related Link கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்