திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நிலவி வந்த சர்ச்சை, ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக உடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ், கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அக்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பேசியது என்ன? நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? அதன் பிறகு கே.சி.வேணுகோபால் என்ன பேசினார்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோஷம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் செயலால் ஆரம்பித்த புகைச்சல், ஒரு வழியாக தணிந்திருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் நாளுக்கு நாள் சலசலப்பு அதிகரித்து காணப்பட்டது. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோஷம் காங்கிரசில் எழுந்தது. குறிப்பாக எம்.பி. மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தியின் ஆலோசகர் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தியதால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அவ்வப்போது புதுப்புது புகைச்சல் ஆரம்பித்தன.ராகுல்காந்தி அறிவுறுத்தல் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் சமூக வலைதள பதிவுகள் மூலம் மீண்டும் பரபரப்பை கிளப்பி விட, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், கூட்டணி விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசுவதையும், சமூக வலைதள பதிவுகளையும் தவிர்க்க வேண்டும் என தமிழக காங்கிரசாருக்கு ராகுல்காந்தி அறிவுறுத்தியிருந்தார். ராகுல்காந்தி அறிவுறுத்தல் காரணமாக, ஆட்சி - அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு சில நாட்களாக எழாமல் இருந்த நிலையில், மீண்டும் அதனை வலியுறுத்தி, மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்த மதுரை தெற்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டணி சலசலப்பு குறித்து ரிப்போர்ட்மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் நிலைப்பாட்டை ஆதரித்து, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி விவகாரத்தில் கட்சி தலைமையின் அறிவுரையை மீறி நடந்துகொண்ட மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரால் கடுப்பான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தை, பெங்களூருவில் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து, கூட்டணி சலசலப்பு குறித்து ரிப்போர்ட் கொடுத்தார். இதனையடுத்து மறுநாளே செல்வப்பெருந்தகை தலைமையில், சென்னை முகப்பேரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் எவர் பேசினாலும் அவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இடம் பெற்றிருந்தது. அதில் குறிப்பாக கட்சித் தலைமையை மீறி திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறுவதை சிலர் தவிர்த்திருக்க வேண்டும் என்றும், இதனால் கூட்டணியில் இணக்கமற்ற சூழல் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியின் நலன் பாதிக்கப்படும் என கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேச கூடாது என்றும், யார் யார் என்னென்ன கருத்துகளை கூறினார்களோ அது அவர்களது சொந்த கருத்து தான் எனவும், அது கட்சியின் கருத்து அல்ல என்றும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினர் கூறும் கருத்து அவர்களுடைய சொந்த கருத்தாகவே பார்க்கப்படும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் போலவே வரும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் எனவும் கூறினார். இதனிடையே தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உங்கள் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என கூறி, தவெக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அமைதியாக இருப்பார்களா? இதன் மூலம் திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில், கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தும் விதமாக பேசியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் இதனை இறுதி எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் அமைதியாக இருப்பார்களா? அல்லது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஆரம்பிப்பார்களா? என்பது போகப் போகத் தெரியும். Related Link திமுக ''கை'' கழுவுமா? காங். ''கை'' நழுவுமா?