திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்ட 3 ஊழல் புகார்களை முன் வைத்து கடிதம் எழுதிய கையோடு, அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் சென்னையில் முகாமிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்த முடிவு எடுத்திருப்பது திமுகவுக்கு நெருக்கடியாக அமையுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மூன்று நாட்கள் முகாம் தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் சென்னைக்கு விசிட் அடித்திருப்பது பரபரப்பை பற்ற வைத்துள்ளது. சென்னையில் மூன்று நாட்கள் முகாமிடும் அமலாக்கத்துறை இயக்குநர், சென்னை மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், அமலாக்கத்துறை கையிலெடுக்கும் வழக்குகளில் அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் உத்தரவிட்டிருந்த நிலையில், அது குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் நிலுவையில் இருக்கும் 500 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை முடிக்க அமலாக்கத்துறை திட்டமிட்ட நிலையில், இந்த விசிட்டின் போது, தமிழ்நாட்டில் இருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை மறு ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கிறதாம் அமலாக்கத்துறை. உயர்நீதிமன்றத்தை நாடிய அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத் துறை வேகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் வழங்கியதில் ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஊழல் என குற்றச்சாட்டை முன் வைத்து டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. பின்னர், பணி நியமனம் செய்ய 888 கோடி ஊழல் என குற்றம் சுமத்தி இன்னொரு கடிதம் எழுப்பியது. இன்னும் உச்சமாக துறையில் அதிகாரிகள், பொறியாளர்களை டிரான்ஸ்பர் செய்ய 365 கோடி ரூபாய் ஊழல் என குற்றம்சாட்டி டிஜிட்டல் ஆதாரங்களுடன் 3வது கடிதம் அனுப்பியது. அமலாக்கத்துறை மூன்று கடிதம் அனுப்பியும் அமைச்சர் நேரு மீது FIR பதிவு செய்யப்படாமல் இருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக உயர் நீதிமன்றத்தை அணுகியது.இதற்கு தானா அமலாக்கத்துறை?அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றே சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீனின் விசிட்டும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தேர்தலுக்குள் திமுக அமைச்சர்கள் சிலர் சிறைக்குள் இருப்பார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி ஆருடம் கூறி வரும் நிலையில், EDயின் தலைமை இயக்குநர் சென்னைக்கு வந்திருக்கும் பின்னணியில் அந்த அசைன்மெண்ட்டும் இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அமலாக்கத்துறையின் சைரன் சத்தம் தற்போதைய சூழலில் அமைச்சர் கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த வழக்குகள் மீண்டும் தூசு தட்டப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு திமுகவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் மீதான வழக்குகள் தூசு தட்டப்பட்ட வாய்ப்பு இருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது. சமீப காலமாக அமலாக்கத் துறையின் ரெய்டு தொந்தரவு இல்லாமல், அரசியல் வாதிகள் நிம்மதியாக இருந்து வரும் நிலையில், தேர்தல் நெருக்கத்தில் அமலாக்கத்துறையின் சைரன் சத்தம் கேட்கும் என்பதை இந்த விசிட் கிட்டத்தட்ட உறுதிபடுத்துகிறது. Related Link தள்ளிப் போகும் ராகுல் விசிட்