Also Watch
Read this
கலைஞர் கருணாநிதி தனது இறுதி காலத்தில் வீட்டில் சிறை வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில், நாக்கில் நரம்பில்லாமல் பேச வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக தனது செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கவே அவருக்கு உரிமை உண்டு எனவும், பதவி கொடுத்தவரின் காலை வாரி விட்டவருக்கு கலைஞரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? எனவும் வினவியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இபிஎஸ் பேச்சு
கிருஷ்ணகிரி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
ஜெயிலில் இருந்தவரின்(ஆ.ராசா) ஆடியோ பரவி வருகிறது. அதுபற்றி சொல்கிறேன். ஆடியோவில், திமுகவில் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை ராசாவுக்கு காட்டவில்லை. சமூகநீதி பேசும், திமுகவில் ஜாதிய பாகுபாடு இருக்கிறது. 'கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலின் அவரை கைதியாக தான் வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றி விட்டார் என்கிறார் ராசா. 'கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் தான் இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை' என்கிறார். தந்தையை கைதியாக வைத்திருந்தவர் மக்களை எப்படி பாதுகாப்பார்? கனிமொழிக்கு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

நெல்லையில் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில், நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நா தழுதழுக்க பேசியதாவது;
முதல்வராக எனது செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் உங்களுக்கு உரிமை இருக்கிறது. தேர்தலில் மக்கள் அதை எடை போட்டு பார்ப்பார்கள். ஆனால், கலைஞர் கருணாநிதியை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும், யோக்கியதையும் கிடையாது. அவர் ஒரு சிங்கம். அவரை யாரும் சிறையில் வைக்க முடியாது. அவரது இதய சிறையில் நானும், இங்குள்ள அவரது உடன்பிறப்புகளும் இருந்தோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved