Also Watch
Read this
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முதல்வர் மீது விமர்சனம்
முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் செய்யப்பட்டு உள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பேச்சு
திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் ஜூன் 20ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, தவெக நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

முன்ஜாமின் கோரி மனு
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், இந்த பேச்சுக்கு அவதூறு வழக்கு தான் தாக்கல் செய்திருக்க வேண்டுமே தவிர, காவல்துறை வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதனால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு
காவல் துறை தரப்பில், ஏழு முறை எம்எல்ஏவாக இருந்த மனுதாரர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும். இந்த வழக்கை பதிவு செய்திருக்காவிட்டால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கும். அதனால் முன் ஜாமின் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. புகார்தாரர் தரப்பிலும் முன் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

முன் ஜாமின் மனு தள்ளுபடி
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “1967ஆம் ஆண்டுக்கு பின் தமிழகத்தை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். நாம் தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தோம். மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல, எம்எல்ஏவாக உள்ளவர். அவர் முதல்வர் பதவிக்கான மரியாதை கொடுக்க வேண்டாமா? இதுபோன்ற மொழியில் ஒரு எம்எல்ஏ ஏன் பேச வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பி, அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஆய்வு சென்றபோது கைது
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஆய்வுக்கு சென்றிருந்தபோது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
