Also Watch
Read this
திருவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகாரில் காட்டாத அவசரத்தை, ஆய்வுக்கு சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்வதில் மட்டும் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பி, சினிமா ஆக்சன் பாணியில், முதலமைச்சர் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்சன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

தவெக எம்எல்ஏ விவகாரம்
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண், திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை? தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல், அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?

எத்தனை பேரைக் கைது செய்வது?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது? வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரை பேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.