news-tamil-logo

3/19/2026, 1:17:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home news குரூப் தேர்வா? குளறுபடி தேர்வா?
tv

Also Watch

tv

Read this

குரூப் தேர்வா? குளறுபடி தேர்வா?

குரூப் 2, 2ஏ மெயின்ஸ் தேர்வு ஒத்திவைப்பு

Posted on: Feb 09, 2026 07:21 AM

41

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், தேர்வு மையங்களில் நடந்த குளறுபடி காரணமாக, தமிழகம் முழுவதும் குரூப் 2, 2 ஏ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது தேர்வர்களை தாண்டி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிற மாவட்டங்களில் பாதி தேர்வே முடிந்த பிறகு ரத்தானதாக வந்த அறிவிப்பு தேர்வர்கள் தலையில் இடியை இறக்கிய நிலையில், அரசின் நிர்வாக குளறுபடிகளே இந்த குழப்பத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

டிஜி வைஷ்ணவா கலைக் கல்லூரியில் நூற்றுக்கணக்கானோர்...
இந்த ஆண்டிலாவது வெற்றி பெற மாட்டோமா? என்ற கனவோடு மெயின்ஸ் தேர்வெழுத வந்த தேர்வர்களுக்கு தொண்டையை அடைக்கும் அளவுக்கு துக்கமே ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு 828 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதன்மை தேர்வு நடக்க இருந்தது. குரூப் - 2 பதவிகளுக்கு 1,126 பேரும், குரூப் - 2 ஏ பதவிகளுக்கு 9,457 பேரும் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த நிலையில், சென்னை டிஜி வைஷ்ணவா கலைக் கல்லூரியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டது. 600 பேருக்கு மட்டுமே கல்லூரியில் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரம் கூட கூட அதிகளவில் தேர்வர்கள் படையெடுத்து வந்ததால் பதற்றம் தொற்றிக் கொண்டது.

லிஸ்டில் பெயர் இல்லாததால் தேர்வர்கள் குழப்பம்
இதனால், உடனடியாக தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை சோதனை செய்த போது, சிலருக்கு தேர்வு மையத்தின் முகவரி மாறியிருந்தது தெரிய வந்தது. அதாவது, நந்தனம் கலைக் கல்லூரிக்கு பதிலாக டிஜி வைஷ்ணவா கலைக் கல்லூரியின் பெயர் அச்சிடப்பட்டிருந்ததே குழப்பத்திற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பிரச்சனைக்கான காரணம் தெரியவே 9 மணி ஆகிவிட்ட நிலையில்,
அடுத்த அரை மணி நேரத்திற்குள் நந்தனம் தேர்வு மையத்திற்கு செல்வது சாத்தியமற்றது என்பதால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் சாலை மறியலில் இறங்கினர்.

திடீர் அறிவிப்பால் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி
தலைநகரில் நடந்த குளறுபடி சம்பவம் காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து மாநிலம் முழுவதும் தேர்வுகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் எந்த பிரச்சனையும் இன்றி தேர்வு தொடங்கி, பாதி தேர்வையே தேர்வர்கள் எழுதி முடித்திருந்த நிலையில், திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதாக வந்த அறிவிப்பு அவர்கள் தலையில் இடியை இறக்கியது.

இனி தேர்வு நடக்குமோ? நடக்காதோ? என தேர்வர்கள் அச்சம்
லட்சக்கணக்கானோர் எழுதிய முதல்நிலை தேர்வில் கடினப்பட்டு முதன்மை தேர்வு வரை வந்தும் நிர்வாகத்தில் உள்ள சிலரின் அலட்சியத்தால் மொத்தமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது அவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. மீண்டும், வினாத்தாள் தயாரித்து தேர்வு எப்போது நடக்குமோ? என கேள்வி எழுப்பிய தேர்வர்கள், இனி தேர்வு நடக்குமோ? நடக்காதோ? என்ற அச்சத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு வயது வரம்பு இருப்பதால், பலருக்கு இதுவே கடைசி வாய்ப்பாக உள்ளது. இதனால் இம்முறையும் வாய்ப்பு பறிபோனால் தங்களது எதிர்காலம் என்னாவது? தங்களை நம்பியிருக்கும் குடும்பத்தினரின் கதி என்னாவது? என கண் கலங்கி நிற்கின்றனர்.

இபிஎஸ், அன்புமணி, விஜய், தமிழிசை, அண்ணாமலை கண்டனம்
டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் தேர்வு நாளன்று தேர்வை ரத்து செய்வது இதுவே முதல் முறை என்பதால் தமிழ்நாடு தேர்வாணையத்திற்கு இது ஒரு கரும்புள்ளியாக மாறியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய், அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிவதாக காட்டமாக விமர்சித்துள்ளனர்.

TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிட மாற்றம்
இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரத்தை பணியிட மாற்றம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது பதவிக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பணியாற்றி வந்த வெங்கட பிரியாவை நியமனம் செய்துள்ளது. இருப்பினும் கட்டுப்பாட்டு அலுவலர் மீது நடவடிக்கை எடுத்ததுடன் நிறுத்தி விடாமல், உடனடியாக புதிய வினாத்தாளை அச்சிட்டு தேர்வுகளை விரைந்து நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Link
பழைய ஓய்வூதியத் திட்டம் பறிப்பு அதிமுக ஆட்சிக்காலத்தில் தான்...

பழைய ஓய்வூதியத் திட்டம் பறிப்பு அதிமுக ஆட்சிக்காலத்தில் தான்...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 30 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved