Also Watch
Read this
Posted on: Aug 27, 2025 07:50 AM
By: Web Team

ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் பிறந்து, மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் ‛கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு' என ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். கடைசியாக தமிழில் ‛சப்தம்' என்ற படத்தில் நடித்திருந்தார்.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் மதுபான பார் ஒன்றில் ஐடி ஊழியர் ஒருவருடன் லட்சுமி மேனனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நடந்த பிரச்னையில் ஐடி ஊழியர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, ஐடி ஊழியர் அளித்த புகாரில் அவரை கடத்திய கும்பலை சேர்ந்த மிதுன், அனீஷ் மற்றும் சோனா ஆகியோர் கைதாகி உள்ளனர்.
இவர்களுடன், அந்த கும்பலில், நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், இந்த தகவலை அறிந்து அவர் தலைமறைவாகி விட்டதாகவும், தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்து வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், கொச்சியில் ஐடி ஊழியரின் காரை மறித்து சண்டையிட்ட லட்சுமி மேனன், மது போதை தலைக்கேறிய நிலையில், ஆவேசத்துடன் பேசியதாக, வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved