Also Watch
Read this
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக ஜப்பான் தகவல் தெரிவித்து உள்ளது. இது, நெடுந்தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையாக இருக்கலாம் என்றும் சந்தேகம் கிளப்பி உள்ளது.

ராணுவ பயிற்சி
அமெரிக்கா, தென் கொரியா நாடுகள், 11 நாட்கள் நடைபெறும் 'ப்ரீ டம் ஷீல்ட்' என்ற ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது. இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என்று, வடகொரியா கருதுகிறது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, 'சோ ஹியோன்' என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து, கடந்த 11ஆம் தேதி குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த ஏவுகணைகள் கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன. இந்த ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு ஏ-வுடன் நேரில் பார்வையிட்டார்.

எதற்கும் தயார்
சோதனைக்குப் பிறகு கிம் ஜாங் உன் பேசியதாவது;
நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுத தற்காப்புத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்து உள்ளது.
இவ்வாறு கிம் ஜாங் உன் கூறியிருந்தார்.

ஜப்பானை நோக்கி...
மேலும், அமெரிக்கா, தென்கொரியா நடத்தி வரும் வருடாந்திர ராணுவ பயிற்சியை கண்டிக்கும் விதமாக, ஜப்பான் கடற்பகுதியை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, வடகொரியா இன்று மார்ச் 14ஆம் தேதி சோதனை செய்து உள்ளது. ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடல் மட்டத்தில் இந்த ஏவுகணை விழுந்திருக்கலாம் என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்த நிலைமையை மதிப்பிடுவதற்கும் ஏதேனும் சேதம் உள்ளதா? என்பதை சரி பார்ப்பதற்கும் ஐப்பான் பிரதமரின் நெருக்கடி மேலாண்மை மையம், அவசர கால பதிலளிப்பு குழுவை அமைத்து உள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் எழுந்து உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved