Also Watch
Read this
Posted on: Jan 30, 2026 07:28 AM
By: Manigandan Raja
அதிமுகவில் மீண்டும் இணைய ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்த நிலையில், அவரை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் நினைத்தால் இருவரது கரங்களையும் இணைக்க முடியும் என ஓபிஎஸ் நம்பி காத்திருந்த நிலையில், ஒன்றிணைப்புக்கு வாய்ப்பு இல்லை என கூறி இபிஎஸ் மறுப்பு தெரிவிக்க, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் இடம்பெறுவது கேள்விக்குறியாகி விட்டது.
”அதிமுகவில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறேன்”
அதிமுகவில் மீண்டும் இணைய தாம் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், கைலாசப்பட்டியில் பேட்டியளித்த அவர், அதிமுகவை ஒருங்கிணைப்பதே தங்களின் முடிவு என்பதால், தன்னை மீண்டும் கட்சியில் இணைக்க இபிஎஸ் தயாரா? என அறைகூவல் விடுத்தார்.
தர்ம யுத்தத்திற்கு மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கமே காரணம்
இரண்டாவது தர்ம யுத்தத்தை தொடங்கியதற்கு காரணமே மனோஜ் பாண்டியனும், வைத்தியலிங்கமும் தான் என ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டினார். ஆரம்பம் முதலே ஓபிஎஸ் உடன் இருந்த இருவரும் திடீரென திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இருவர் மீதும் பழி சுமத்தினார்.
கட்சிக்கு துரோகம் இழைத்தவர் ஓபிஎஸ் - இபிஎஸ் திட்டவட்டம்
ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் மீண்டும் இணைய தான் தயாராக இருப்பதாக ஓபிஎஸ் கூறியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சிக்கு ஓபிஎஸ் துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved