Also Watch
Read this

“நல்ல படங்களை அங்கீகரியுங்கள்”
'மொத ராத்திரி' திரைப்படத்தை பார்த்து மிகவும் ரசித்தேன். படத்தின் கதை, கதாபாத்திரங்கள், நகைச்சுவை என எல்லாம் அருமையாக உள்ளது என நடிகர் சிம்பு கூறி உள்ளார். மேலும், இதுபோன்ற சிறிய, நல்ல படங்கள் பிற மொழிகளில் வரும்போது கொண்டாடுகிறோம். ஆனால் தமிழில் இப்படியான படங்கள் வரும்போது கவனிக்க மறந்துவிடுகிறோம். நல்ல படங்களை நாம் தான் அங்கீகரிக்க வேண்டும் என்றும் நடிகர் சிலம்பரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி பகிர்ந்த புகைப்படம்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதல்முறையாக இணைந்து நடித்து வரும் புதிய திரைப்படத்தின் (Production No.23) 18ஆம் நாள் படப்பிடிப்புத் தளத்திலிருந்து, எடுக்கப்பட்ட பிரத்யேகப் புகைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'செக்கச்சிவந்த வானம்' திரைப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி மீண்டும் மணிரத்னத்துடன் இணைகிறார். சாய் பல்லவி மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. இந்த அழகான காதல் காவியத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த புதிய படத்திற்காக விஜய் சேதுபதி தனது வழக்கமான தாடி, மீசை எதையும் இல்லாமல் முற்றிலும் கிளீன் ஷேவ் செய்த இளமையான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

தலைப்பால் பயம் வேண்டாம்
குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம்தான் ‘மொத ராத்திரி’ என்றும், படத்தின் டைட்டிலை பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை, படத்தில் எந்த ஆபாசமும் இல்லை என்றும், நடிகை அனிஷ்மா கூறி உள்ளார். இந்த படத்தில், 'முத்துச்செல்வி' என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் அனிஷ்மா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான மாற்றங்கள் மற்றும் அச்சத்தை அழகாக வெளிப்படுத்த தனக்கு இந்தத் திரைப்படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என அனிஷ்மா கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved