Also Watch
Read this
திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதே தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜயை 2 முறை சந்தித்து ஊடக கேமரா கண்களை தன்பக்கம் திருப்பிய பிரவீன் சக்கரவர்த்தி, தற்போது தமிழ்நாட்டு காங்கிரஸில் பவர்ஃபுல் நபராக வலம் வந்து கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது. மாநில தலைமையில் எந்த பதவியிலும் இல்லாத பிரவீன் சக்கரவர்த்தியை ராகுலுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்திற்காக டெல்லி தலைமை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதால், மூத்த தலைவர்கள் பொறுமி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்
கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றையே தலைகீழாக புரட்டிப்போட்டது. தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது எப்படி அரசியலில் புதுசோ, அப்படிதான் திமுக உடனான 20 ஆண்டுகால நட்பை காங்கிரஸ் உடைத்ததும் புதுசுதான். கடைசியாக 1967ல் அமைச்சரவையில் இடம்பிடித்த காங்கிரஸ், தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததன் பயனாய் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2 அமைச்சர்களுடன் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறது. இந்த மேஜிக்கிற்கு பின்னால் பிரவீன் சக்கரவர்த்திதான் காரணகர்த்தாவாக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரம் கூறுகிறது.

யார் இவர்?
இவரது பெயர் கூட பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, முதலமைச்சர் விஜயை 2 முறை சந்தித்து அனைவரது ஃபோகஸையும் தன்பக்கம் திருப்பியவர்தான் பிரவீன் சக்கரவர்த்தி.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தபோதே தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என திரியை கொளுத்திப்போட்டார். பிரவீன் சக்கரவர்த்தி தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி கொண்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகையே டெல்லி தலைமைக்கு புகார் கடிதம் எழுதியதாக கூறப்பட்டது.

ராகுல்காந்தியுடன் நெருக்கம்
ஆனாலும், ராகுல் காந்தியுடனான நெருக்கம் பிரவீன் சக்கரவர்த்தியை கொஞ்சமும் அசைத்து பார்க்கவில்லை. கடைசிநேரத்தில் சோனியா காந்தியின் தலையீட்டாலும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை இழுத்துப் பிடித்ததாலும் திமுகவுடனேயே கூட்டணி தொடர்ந்தது. ஆனால், தேர்தல் முடிவே தவெக-காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கி பிரவீன் சக்கரவர்த்தியின் எண்ணத்தை ஈடேற்றியது. தவெகவிற்கு ஆதரவளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நபராக இருந்தது பிரவீன் சக்கரவர்த்திதான்.

ஆலோசனைக்குழுவில்...
தமிழ்நாட்டில் எந்த பொறுப்பிலும் இல்லாத இவர், மாநில காங்கிரஸ் தலைமையில் தேர்தலுக்கு முன்பே ஒரு முக்கிய நபராக வலம் வந்ததோடு, தவெகவுடனான கூட்டணிக்கு பிறகு கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த ஆலோசனை குழுவிலும் இடம்பிடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தவெக கூட்டணி கட்சிகளின் 2ஆவது கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக கலந்து கொள்பவர்களின் அதிகாரப்பூர்வமான கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட் பெயர்களுடன் பிரவீன் சக்ரவர்த்தியின் பெயரும் இருந்தது.

முக்கியத்துவம்...
தமிழ்நாடு காங்கிரஸிலேயே பல மூத்த தலைவர்கள் இருக்கும்போது பிரவீன் சக்கரவர்த்திக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருந்தது.

முன்பெல்லாம் தேர்தல் கூட்டணி, அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ப.சிதம்பரம், முன்னாள் மாநில தலைவர்களான கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, தங்கபாலு உள்ளிட்டோரிடம் தான் ஆலோசனை கேட்கப்படும். தற்போது அவர்களிடம் பெயருக்கு ஆலோசனை கேட்கப்பட்டாலும் பிரவீன் சக்கரவர்த்தியின் ஆதிக்கம் தமிழ்நாடு காங்கிரஸில் இருப்பது கண்கூடாகவே தெரிகிறது.

ராஜ்யசபா எம்பி ஆக...
அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸின் தலைவராக இருந்த பிரவீன் சக்கரவர்த்தி, அதில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அவர் கவனம் செலுத்துவதற்காகவும், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காகவும் தான் இந்த பதவி மாற்றமே செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மூத்த தலைவர்களுக்கு மன உளைச்சல்
அதேபோல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் பிரவீன் சக்கரவர்த்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் மீது டெல்லி தலைமை உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது காங்கிரஸின் மூத்த தலைவர்களைதான் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாம்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved