Also Watch
Read this
Posted on: Jan 28, 2026 07:47 AM
By: Manigandan Raja
குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர். திரௌபதி முர்மு உரையாற்றும் போது 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடங்கியது பட்ஜெட் கூட்டத் தொடர்
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினர். இன்று தொடங்கி உள்ள பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்ரல் 2ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 13ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட அமர்வு மாா்ச் 9 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
குடியரசுத்தலைவர் உரை
இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். அப்போது, நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கமாகும் என்றும் அருணாசல், திரிபுரா, மிசோரம் ஆகிய மூன்று மாநில தலைநகரங்களும் அகல ரயில் பாதையுடன் இணைக்கப்படும் என்றும் கூறினார்.
எதிர்க்கட்சிகள் அமளி
வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்தை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் எதிர்ப்புக்கிடையே திரௌபதி முர்மு தொடர்ந்து உரையாற்றினார். அப்போது, மீனவர்கள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குடியரசுத்தலைவர் பெருமிதம் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிப்ரவரி 2ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மிக அரிதான நிகழ்வு. மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9ஆவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். நாளை ஜனவரி 29ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved