Also Watch
Read this
By: Manigandan Raja

சுமார் ஒரு டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஆணிவார ஆஸ்தான தினமான இன்று திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் திருவீதி உலா கண்டருளி ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆணிவாரா ஆஸ்தான தினத்தை முன்னிட்டு திருப்பதி மலையில் இன்று மாலை ஏழுமலையானின் புஷ்ப பல்லக்கு சேவை நடைபெற்றது. புஷ்ப பல்லக்கு சேவையை முன்னிட்டு சுமார் ஒரு டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களை பயன்படுத்தி தேவஸ்தான தோட்டத்துறையினர் புஷ்ப பல்லக்கை தயார் செய்திருந்தனர்.

இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் புஷ்ப பல்லக்கு சேவை நடைபெற்றது.
அப்போது நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் புஷ்ப பல்லக்கு சேவையை கண்டு சாமி கும்பிட்டனர்.